anti - piracy

Post Page Advertisement [Top]

                                                                              



பக்கத்து வீட்டு ஏழைக் குடும்பம்

பண்டிகைச் செலவுக்கு

கடன் கேட்காமலிருக்க

கதவை உள் தாழ்ப்பாளிட்டு

தன்னை சிறை வைத்து

உள்ளங்கை கைப்பேசியில்

அன்பை விதைக்கும்

விசித்திரமான உலகம்.

தீபாஸ்

**************************************************************

எனக்கு எளிமை தான் ஈர்ப்புள்ளதாக இருக்கிறது .

மனிதர்களிலும் எழுத்துக்களிலும் எளிமைதான்

 என்னால் விரும்பக்கூடியதாக இருக்கிறது.

 

ஒருவேளை பகட்டும் செறிவுமிகுந்தும் 

இருப்பது எனக்குத் தெரியாத 

வழிப்போக்கர்களாக இருப்பதால் 

ஒன்றிப்போக முடியவில்லையோ.

 

எளியவளான எனக்கு பகட்டுள்ள எதுவும் 

ஒத்துவருவதில்லை என நினைக்கிறேன்.


இங்கொன்று சொல்ல நினைக்கிறேன்.

 எளிமை என்பதற்கும் தெளிவு என்பதற்குமான 

தொடர்பு மிகவும் நெருங்கியது.

 

சுத்தமான நீர் போல தெளிந்த நிலையில் 

முகம் பார்க்கும் கண்ணாடி நீர்த்தேக்கம் 

எளிமையின் சின்னம்.

 

அத் தூயநீர் நான் பருகுவதர்க்கு 

ஏற்புடையதாக இருக்கிறது.

எளிமையானவளாக இருப்பதில் 

பெருமையாக உணர்கிறேன்.

இந்த உலகம் என்னை போல 

எளியோர்களின் கூடாரம்.

 

தீபாஸ்

***************************************************************

காதல் மாதக் கவிதை 1

காதலி அவள்கள் யட்சிணிகளாவர்

அவளின் பிடியில் விழுந்தவன்கள்

ஆயுள்கைதிகளாவர்.

 

அவளின் கடலளவு காதலில் மூழ்கி

தரைத் தொட்டு கரைச் சேர

ஜென்மம் போதாது!

 

எழில் வடிவங்களின் ஏற்றத்தாழ்வினை

எதுகை மோனையாய் எழுதிக்குமித்து

இதழ்பதித்து இடைவளைத்து

அவனின் ஏக்கமதை தணித்து

முழுதும் வென்றதாய்   

அங்கலாய்கிறான்.

 

காதல்பசி தீர்ந்ததாய் மார்தட்டியவனுக்கு

அடுத்தடுத்த வேளையிலும் தீராகாதல்

பசியெடுக்கக் கடவது என்றவள்

சபித்தது அறியாது மார்தட்டுகிறான்..

விடாது காதல்! 

 

தீபாஸ்.

******************************************************************

 காதல் மாதக் கவிதை 2


மனிதப் பிறவியின் இரு

துருவங்கள் இவர்கள்.

 

அவள்களுக்கான உணர்வுகளின் பதம்

அவன்களுக்கு இல்லை

அவள்கள் தருவதும்தேவையும்

அரவணைப்பாகும்

அவன்களுக்கு பசி,தூக்கம் அடுத்ததாய்

அவள்களும்

 

இவர்களின் எதிர் பதமே

காதலின் ஈர்ப்பு விசையாகும்

விசையில் நிலைநிறுத்திக்கொள்ள

காதலின் நிறை திறன் பொருத்து

அதன் விசை யளவு மாறும்.

 

 ஈர்ப்பு பாதியானால் காதல்

வெடித்தோ மோதியோ உடையும்.

ஆதலால் காதலின் ஈர்ப்பு விசை

எந்நாளும் நிறைந்து இருக்கட்டும்.

 

தீபாஸ்

**************************************************************

காதல் மாதக் கவிதை 3

ஒவ்வொருமுறையும் பிடித்திருந்த

கையுதறிப் போகையில் - தன்னைப்

புரியவைப்பதற்கான முயற்சிக்கு

முற்றுப்புள்ளி வரையத் துணிகிறார்.

போதாமையின் கற்பனையில்

போகின்றவரின் தேவை

போகுமிடத்திலும் நிறைவடைந்திடாது

இடையில் கைநழுவிப்போவது அவர்களின்

எதார்த்தமென்று உணருகையில்

இருவரின் பயணப்பாதையும்

வெவ்வேறாகிறது

 

தீபாஸ்

********************************************************

4 ஆம் காதல் பாடல்

 மடிந்து போன காதலுக்கு

எழுதப்படும் கவிதைக்கு

தாஜ்மஹாலின் சாயல்

 

தீபாஸ்

********************************************************

5 காதல் மாதக் கவிதை 


அவள்களின் உடன்போக்கு

கைவிட்ட முதல் காதலுக்கே

ஆயுள் ஜாஸ்த்தி

 

நடப்பில் அவள் உணர்வுகள்

பந்தாடப்படும்போது,

அனிச்சையாய்

நீ கொண்டாடியவளின் நிலை

இன்று துண்டாடப்படுகிறதே

ஏன் விட்டுப்பிரிந்தாயென

மனதினுள் அரற்றும்

 

பிரிவு என்பது இயற்கை

எனக் கொண்டு தொப்புள்

கொடி சொந்தத்திற்கே

வாழ்வை அற்பணிக்கும்

 

அன்று கண்ட இடந்தலைப்பாடு

இடத்திற்கு போக நேர்ந்தால்

கண்ணில் தூசி

விழுந்ததாய்ச் சொல்லி

கண்கலங்கி நிற்கும்.

 

கணவன் குழந்தைக் கொண்டு

கடந்து சென்றாலும்

கைக்கூடா முதல் காதலின்

நினைவு ஒன்றை

யாரும் அறியாமல்.

கையில் ஆயுள் முடியும்வரை

பதுக்கியே வைக்கும்  

தனது  அஸ்தியுடனே

சாம்பலாக்கும்.

 

தீபாஸ்

********************************************************

காதல் மாதப் பாடல் 6

அவன் அவள் கூட்டுச்சேர்க்கை 

காதல் படைப்பாகும்.

இருவருக்கும் பொதுவான

இலக்கியமாகும்

 

காதலின் பாடுபொருளில்

இவ்விரு பாத்திரங்களும்

அவசியமாகும்  

 

இரண்டில் ஒன்று ஒன்றாவிடில் 

அபஸ்வரம் உண்டாகும்.

 

 பாத்திரங்களின் வேறுபட்ட

தன்மைகள் கண்டு

ஒன்றை யொன்று அறியும்,

ஆவல் கொண்டு

 

ஒன்று மற்றதைப் படித்து

பட்டம் பெற ஆவன

செய்தல் காதலாகும்.

 

ஆசான் தேவையில்லை

உயர்வு தாழ்வு பேதமில்லை

மனிதராய் பிறந்தோரெல்லாம்

படிக்கும் பாடமாகும்

 

தீபாஸ்

**************************************************************

பாதையில் கிடந்த உடைந்த

கண்ணாடித் துண்டு

என் பாதம் கிழித்து

ரத்தம் குடித்ததைக் கண்டு

 

பார்த்து  கவனமாக

வர முடியாதாவென

அதட்டி, மஞ்சள் வைத்து  

அழுத்து சரியாகிவிடுமென

கடந்து செல்கிறாய்

 

அன்றொருநாள் சிறுகல்லில்

என் பாதம் அழுத்தி

லேசாக வலியெடுத்ததும்

குழந்தையாய் உன்

கவனம் ஈர்க்க ஸ்ஆ...வென

பெரும் சத்தமெழுப்பினேன்

 

உனக்கு வலித்ததாக துடித்து

என் பாதத்தை

உள்ளங்கையிலேந்தி

கண்கலங்கி தடவிகொடுத்து

மருந்திட்டதை

நினைவில் கொண்டே

 

எனைக்கடந்து செல்லும்

உன் பாதத்தை

இன்றும் பின்பற்றி

நடக்கிறேன்

வானம் பார்த்த பூமியாக.

 

தீபாஸ்.

*************************************************************

உன்னை தொலைத்ததால்

எனது வேலையெதுவும்

தேங்கிவிடவில்லை..

 

தட்டில் வைத்திருக்கும்

பதார்த்தம் உண்டு

பலூனாக ஊதுவதில்

எவ்வம் கொண்டு

மிச்சம்வைப்பதில்லை.

 

பெட்டிப் பணத்துக்கு

செலவு வருவதில்லை.

 

அன்றாட நிகழ்வில்

எந்த மாற்றமும்

நிகழவில்லை.

 

அன்று உளமார,

நீயின்றி என்னால்

வாழமுடியாதென்றது

பொய்துப்போய்

 

தனியான பொழுதுகளின்

ஆக்கங்கள்

 

வாழ்க்கை ஏணியில்

ஏற்றிவிடுகிறது

 

வெற்றி கோப்பையை

எனக்கு பரிசளிக்கிறது

 

இக்கோப்பையை பெற

காரணியான உனக்கே

அதை அர்ப்பணிக்க 

உளம் தேடுகிறது.  

 

தீபாஸ்

*************************************************************

காதலர் தினம்

 

 

கண்களில் புகுந்து

கருத்தினில் நிறைந்து

அன்பினைப் பகிர்ந்து

உள்ளம் உருகி

ஒன்றுசேரும்

காதலை

 

ஒற்றை திங்களில்

கொண்டாடி தீர்ப்பது

விந்தையும்

வேடிக்கையுமாகும்.

 

இடம், பொருள், ஏவல்

கொண்டு புரிவதல்ல

காதல்,

 

ஆயிரம்பேர் மத்தியில்

பரிபாசைகள் கொண்டு

இரகசியமாய்

இருவரும்

உரையாடும்

அதிசயம் காதல்  

 

ஒருவரை ஒருவர்

கொண்டாடி பேணிக்காத்து

தனிமைப்பிணி

வாட்டாது காக்கும்

 

ஈருடல் ஓருயிராக

கடைசிவரை

தொடர்வதே காதலாகும்

 

ஆதலால் காதலை

கொண்டாடுவோம்

வாழ்க்கை முழுவதும்.

 

தீபாஸ் 

 

 *************************************************************

 


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib