anti - piracy

Post Page Advertisement [Top]

                                            செவ்விழியன் (தீபாஸ்)                      


அத்தியாயம் 9.2 &10

ப்பொழுது பூபதிராஜாவின் கைபேசி ஒலி எழுப்பியது அதை எடுத்து டிஸ்பிளேயை பார்த்தவர், “அலாரம் வச்சிருந்தேன், எனக்கு மில்லில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீங்க ஒரு முடிவெடுத்துட்டு என்னோட ஹெல்ப் வேணும் என்றால் கேளுங்க, கட்டாயம் செய்றேன்.என எழுந்துகொள்ள முனைந்தபோது,

       விழியன் கிரஹாவை பார்த்து, “மேடம் நீங்களும் மாற்றத்தை எங்களை போல எதிர்பார்க்குறீங்கன்னு சொன்னதும், எங்களோட வொர்க் பண்ண முன்வந்ததும் கேக்க சந்தோசமாய் இருக்கு. நாங்க முடிவெடுத்துட்டு நாளைக்கே என்னோட பதிலை உங்களுக்கு சொல்றேன்.என்றான்.

    அவன் நேரடியாக தனது தங்கையிடம் பேசவும், ‘நானே உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன்.என சொல்ல நினைக்கும் முன் கிரஹா வாய் திறந்தாள்.

       “இதோ இது எங்க டிரஸ்ட் விசிடிங் கார்ட். இதில் என்னோட மொபைல் நம்பர் இருக்குது பாருங்க. உங்க பதிலை அதில் இருக்கிற என்னோட நம்பருக்கு காண்டாக்ட் செய்து சொல்லுங்க.

    என்று அவர்களின் எதிரில் இருந்த அந்த மரத்தினால் செய்யப்பட்ட டீபாயில், ஒரு அழகிய பேழையில் விசிடிங் கார்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள் கிரஹா.

     அதனால் தான் சொல்ல வந்த வார்த்தைகளை  சொல்லாமல் விழுங்கி கொண்டார் பூபதிராஜா. ‘பாவம் சின்ன பசங்க. அதுவும் காளிதாஸ் அய்யாவோட பேரன். ஊருக்கு நல்லது நடக்கணும் என்று அந்த அய்யாவை போலவே மனசு உள்ள நல்ல பிள்ளையா இருக்கான்.

    அதேபோல எனக்கு நல்லா தெரிஞ்சவங்க, நல்ல பசங்கலாய் இருப்பாங்கன்ற நினைப்பில் கிரஹாவும் அவங்க கூட சகஜமா பேசுறாள்

      காலையில் சாந்தா பேசியதை வைத்து அவளைப் போல நானும் யோசிக்க ஆரம்பிக்கிறது தப்பு’ என அவருக்கு அவரே மனதினுள் சமாதானம் சொன்னபடி இருவருக்கும் விடை கொடுத்தார்.

***

    ஸ்ரீராம் தண்ணீர் லாரியின் முன் முண்டி அடித்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க நின்றுகொண்டிருந்த மக்களிடம், “வரிசையா வாங்க. அப்போதான் தண்ணீர் சப்ளை பண்ண சொல்லுவேன். நம்ம எம்.எல்.ஏ வை பார்த்து நாங்க தான் நம்ம ஏரியாவில தண்ணீர் வரலைன்னு சொல்லி வண்டி தண்ணி அனுப்ப சொல்லி பேசினோம்.

    சொன்னதுமே அவர் போன் செய்து வண்டி இன்னைக்கு வந்திருக்கு.

  ஒழுங்கா வரிசையில் சண்டை சச்சரவு இல்லாம பிடிச்சா ஆற்றில் தண்ணி நமக்கு வந்து முனிசிபல்  தண்ணி வரும்வரை வண்டி தண்ணி கிடைக்க ஏற்பாடு பண்ணுவேன்.

    இல்லைன்னா நானே தண்ணி வண்டி அனுப்பினா ஒரே சண்டையா இருக்கு வேணாமுன்னு  சொல்லிடுவேன், வரிசையா நில்லுங்க.எனச் சொல்லிக் கொண்டிருந்தான்.

     அந்த நேரம் அங்கு பூபதிராஜா வீட்டில் இருந்து கிளம்பி டூவிலரில் தங்கள் தெருவுக்குள் நுழைந்த விழியனும் கதிரும், தண்ணி வண்டி நிற்பதையும் அங்கிருக்கும் மக்களை தனது வார்த்தையால் தண்ணீர் பிடிக்க வரிசையில் ஒழுங்குபடுத்தும் ஸ்ரீயையும் பார்த்தனர்.

     “டேய் விழியா, இப்போ இவனை எப்படி சமாளிக்க? எம்.எல்.ஏ வேற தண்ணி வண்டி அனுப்பிட்டான் போல. அப்போ இவன் எம்.எல்.ஏவுக்கு ஆதரவா மக்களிடம் பேச ஆரம்பிச்சிருப்பானே. நம்மளையும் அவனோட கூட்டு சேர்ப்பான். எப்படி இதை டீல் பண்ண போற?” எனக் கதிர்  விழியனிடம் கேட்டான்.

    “யதார்த்தத்தை பேசுவோம் கதிர், நீ என்கூட நில்லு. மத்ததை நான் கவனிச்சுக்கிறேன்.எனச் சொன்னான் விழியன்.

    இவர்கள் இருவரும் பைக்கில் லாரியின் அருகில் சென்றதும், அந்த சூழலில் லயித்திருந்த ஸ்ரீராம் தற்செயலாக அங்கு வந்த பைக்கை ஏறிட்டுப் பார்த்தான்

டேய் எங்கடா போயிட்டீங்க இரண்டு பேரும்? உங்க மொபைல் கூட ஸ்விச் ஆஃப் ன்னு வந்தது.என்றான்.

      அப்பொழுது கூட்டத்தில் இருந்து சத்தமாக, “என்ன ராஜம்மாக்கா, உங்க வீட்டில மொத்தமே மூனு பேரு தான் உங்களுக்கும் மூனு கொடம் தண்ணி. எங்க வீட்டுல ஏழு பேரு, எங்களுக்கும் மூனு கொடம் தண்ணின்றது எப்படி நியாயம் ஆகும்?” எனக் கேட்டார் ஒரு பெண்.

    அதற்கு அந்த பெண், “அதெல்லாம் தெரியாது வசந்தியக்கா! வீட்டுக்கு மூனு கொடமுன்னுதான் சொல்லி இருக்காங்க. நீங்களும் மூனு கொடம் தான் பிடிக்கணும்.என்று சொல்ல

  வசந்திக்கு பரிந்து கொண்டு நாலுபேரும் ராஜம்மாவுக்கு பரிந்து கொண்டு நாலு பேரும் பேச அங்கு சண்டை மூளும் சூழல் வந்தது.

அதோ விழியன் வந்துட்டான் அவனே இதுக்கு ஒரு முடிவு சொல்லட்டும்.எனக் கூறி, விழியனையும், கதிரையும் நிறுத்தினர்

   பேசிக்கொண்டிருந்த ஸ்ரீராமை பொருட்படுத்தாது, “எப்பா விழியா... இங்க பாரு, உங்க சின்ன அத்தை ராஜம்மா பேசுறதை!என்று பஞ்சாயத்து பண்ண அவனை அழைத்தாள் வசந்தி.

   சற்று நேரம் தான் கவனமில்லாமல் ஃபோனை பார்த்துவிட்டு, விழியன் பைக் வரவும் அவனை நிறுத்தி பேச ஆரம்பித்ததில் ஒழுங்குபடுத்தி வைத்திருந்த வரிசை குழம்பி, அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை கண்டு கடுப்பாகி அவன் பேசுவதற்குள் விழியன் அவர்களிடம்,

   என்ன அத்தே! அவங்க சின்னத்தைன்னா நீங்க எனக்கு பெரியத்தைதானே. இப்போ என்ன, யார் எத்தனை குடம் தண்ணி பிடிக்கணும்றதுதானே பிரச்சனை?

   வசந்தி அத்த, உங்க வீட்டுல இரண்டு குடும்பம் இருக்கு. நீங்களும் உங்க சின்ன மகனும் ஒரு குடும்பம். உங்க பெரிய மகனும் அவன் பொண்டாட்டி புள்ளங்க ஒரு குடும்பம்ன்னு ஆக மொத்தம் இரண்டு குடும்பம் இருக்கு உங்க வீட்டுல. அதனால நீங்க மூனு குடம், உங்க மருமக மூனு குடம் பிடிச்சுக்கோங்க

     ராஜம்மா அத்தை, நாளைக்கு உங்க மவனுக்கு கல்யாணம் ஆன பின்னாடி நீங்க ஒரே வீட்டில இருந்தாலும் ஆறு குடம் பிடிச்சுக்கலாம். ஆனா, அதுவரை நீங்க ஒரே குடும்பம்தான் இப்போ மூனு குடம் மட்டும் புடிச்சுக்கோங்க.எனச் சொன்னான்.

      விழியன் பேசும் முன்பு வரை ராஜம்மாவுக்கு சப்போர்ட்டாக கிளம்பிய கூட்டம் அதன் பின், “விழியன் சொல்றதும் சரிதான்!எனச்சொல்லி வசந்தியின் பக்கம் பேச ஆரம்பித்ததும் ராஜம்மா முணுமுணுத்துக் கொண்டே வேறு வழி இல்லாமல் வசந்தி ஆறு குடம் தண்ணீர் பிடிப்பதை பார்த்து கொண்டு நின்றார்.

     அப்போத்து அங்கிருந்த நெட்டை பால்பாண்டி என்று எல்லோராலும் அடையாளப்படுத்தப்படும் நபர்,

   எப்பா விழியா, நீங்க மூனு பேர் போய் எம்.எல்.ஏ வை பார்த்து பேசி தெருவுக்கு தண்ணிய கொண்டு வந்துட்டீங்களே, நல்ல வேலை செய்தீங்கப்பா. பொறுப்பான புள்ளைங்கதான்!

    காளிதாஸ் அய்யா இரத்தம்ல அதுதான் ஊரு காரியத்துல பொறுப்பா இருக்கீங்க.என்றார்.

     அப்பொழுது ஸ்ரீராம், “பார்த்தீங்கல்ல, நம்ம எம்.எல்.ஏ அகத்தியன்றதால போய் பார்த்துப் பேசி தண்ணி வண்டி தெருக்குள்ள வரவைக்க முடிஞ்சது. வேற யாரும் எம்.எல்.ஏவா இருந்தா இப்படி செய்ய வைக்க முடியாது. அதனால இந்த தடவை எலெக்சன்லையும் அவருக்கே ஓட்ட போடுங்க.என்றான்.

     அவன் அவ்வாறு சொன்னதும், “ஏ நெட்டை பால்பாண்டி நீ வேறப்பா, ஓட்டு போட்டு அந்த ஆளை எம்.எல்.ஏவாக்கி ஐந்து வருஷம் முடிய போகுது. இதுவரை தொகுதிக்குள்ள எட்டிக்கூட பார்க்கலை அந்த ஆளு.

      இன்னும் இரண்டு நாளில் தேர்தலுக்கு மனு தாக்கல் பண்ண போறாங்க. அப்போ ஓட்டு கேட்டு எந்த மூஞ்சியை வச்சு கிட்டு வரன்னு நினச்சு இப்போ தண்ணி வண்டி அனுப்பியிருக்கார்.என்றார் மற்றொருவர்.

     அந்த ஆளிடம் ஸ்ரீராம், “நீங்க எதிர்கட்சி ஆளுன்றதால எல்லாத்தையும் குதர்க்கமாவே பார்க்காதீங்க அண்ணே!என்று கூறினான்.

       அதற்கு விழியனோ, “அடிப்படை வசதி தண்ணி. அதை செய்து தருவது தொகுதி எம்.எல்.ஏவோட வேலை.

    இதில் அவரை புகழணும்னு இல்லை தூத்தணும்றதும் இல்லை. நமக்கு தண்ணி தேவை. தேவை நிறைவேற்றும் இடத்தில் இருந்து தேவை கிடைச்சிருக்கு அம்புட்டுத்தான்.

   சரி கக்கூசுக்கு தண்ணி அடிச்சு திறந்து விட்டுட்டாங்களா?” எனக் கேட்டான் விழியன்

    “ம்... அது கக்கூசுக்கு விடிகாலை ஆறு மணிக்கே தண்ணி வண்டி அடிச்சுட்டாங்க.என்றான் ஸ்ரீராம்.

   அவனிடம், “நீ இங்க கவனிச்சுக்கோ ஸ்ரீராம். நாங்க இரண்டுபேரும் காலையில் இருந்து இன்னும் சாப்பிடலை, சாப்பிட்டுட்டு வாரோம்.எனச் சொன்னான்  கதிர்.

     “அது சரிடா, காலையிலேயே எங்க போனீங்க? என்கிட்ட கூட சொல்லாம?” எனக் கேட்டவனிடம்,

   “வந்து சொல்றோம்டா... இப்போ நாங்க கிளம்புறோம்.எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டனர் விழியனும், கதிரும்.

     விழியனின் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்ட கதிர், “டேய் அந்த கிரஹா மேடம் சப்போர்ட் பண்ணுறேன்னு சொல்றதுக்காகவே எலக்சன்ல நீ நிக்கலாம்டா. என்ன பொண்ணு அவங்க! என்னமா அறிவா போல்டா பேசுறாங்க! என்ன ஒரு அழகு!” என்றான்.

   “டேய் கதிரு அடங்குடா, உனக்கு ஒரு மணி நேரம்தான் டைம். நம்ம பசங்க யார் யாரை குரூப்பா திரட்டலாம். சீக்ரட்டா பேசி முடிவெடுக்கலாம்னு நான் ஒரு லிஸ்ட் எடுத்துட்டு உன்கிட்ட பேசுவேன். அதுக்குள்ள நீ சாப்பிட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு என் வீட்டுக்கு வர.என்றான்.

      அவன் அவ்வாறு சொன்னதும் கதிர், “ஆமா ஆமா, முடிவெடுத்து கிரஹா மேடம்ட்ட சொல்லணும்லநீ யார் யார் கிட்ட நாம பேசலாம்ன்ற டீடெய்ல் ரெடி பண்ணு. நான் கிரஹா மேடம் பத்தியும் அவங்களை எப்ஃபி, டிவிட்டர் அக்கவுண்டில் எப்படி ஃபாலோ பண்ணலாம்ன்னு பார்க்குறேன். முடிஞ்சா பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பிட்டு வாரேன்.என்றான்.

   “டேய் கதிர், ஓவரா போரடா! நீ விளையாட்டா பேசுறன்னு எனக்கு தெரியுது. ஆனாலும் அவங்க கூட நாம செய்யப்போற களப்பணி பெரிசு. அதுக்குத் தக்கன மெச்சூர்டா இல்லாம இருந்தா அவங்களுக்கு நம்ம மேல நல்ல அபிப்ராயம் இல்லாம போயிடும். கொஞ்சம் அடக்கிவாசிஎனச் சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று விட்டான் விழியன்.

***

 


 

அத்தியாயம் 10

 

    கதிர் குளித்து முடித்து தனது மடிக்கணினியில் மெயில் எதுவும் வந்துள்ளதா என பார்க்க நினைத்தான்.

    அப்போது அவனின் மனதில், கிரஹா மேடத்தை தான் சோசியல் மீடியாவில் பாலோ செய்யப்போவதாக விழியனிடன் சொல்லி வந்தது நினைவில் ஆட அவனின் முகநூல் பக்கத்தை திறந்தான்.

       தேடும் கட்டத்தினுள் கிரஹாவின் பெயரில் அவளின் முகநூல் பக்கத்தை தேடி பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    அதே நேரம் செவ்விழியன் வாட்சப்பில் தனக்கு நெருக்கமான முக்கிய நண்பர்கள் உள்ள ஒரு குழுவை கட்டமைத்து கொண்டிருந்தான்.

    அதில் அவன் திரட்டும் நபர்களிடம், அரசியல் மாற்றம் விரும்புபவர்கள் மட்டும் மற்றொரு புது வாட்சப் குரூப்பின் லிங்க் அதில் கொடுத்து, அதில் குதிக்குமாறு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தான்.

   அவ்வாறாக மாற்றத்தை விரும்பும் வெறும் இருபத்தி ஏழு பேர்களை மட்டுமே அவனால் அப்போதைக்கு அந்த குழுமத்தில் இணைக்க முடிந்தது.

     அந்த நேரம் மதி தனது அம்மாவிடம், “விழியன் வந்துட்டானாம்மா? அவன்ட்ட பைக் கீ வாங்கணும். நான் கொஞ்சம் வெளியில் போக வேண்டியிருக்கு.என்றான்.

   “அவன் வந்தாச்சு. இப்போ எதுக்கு தேவையில்லாம நீ வெளியில போற? கொரோனா நேரத்தில் வெளியில நீ போறன்னு தானே உன் மேல திவ்யா கோபப்படுறா. உன்னோட பிரண்ட்ஸ் கூட போன்ல பேசு அது போதும்.  

     உன் தம்பி உள்ள போனை நோண்டிட்டு இருக்கான். நீ போய் பேசி அவன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு வந்து என்கிட்ட சொல்லுடா.

    இரண்டு  பேரையும் ஒரே போலத்தானே பெத்து, நல்லது கெட்டது சொல்லி வளர்த்தேன். ஆனா, அவன் மட்டும் ஏன்டா இப்படி சொல் பேச்சு கேக்காம அடங்காம இருக்குறான்?” என்றாள்

    விழியன் தனது தாத்தாவின் அறையில் உள்ள மேஜை முன்பிருந்த சேரில் அமர்ந்து, நண்பர்களை வாட்சப் குரூப்பில் இணைக்கும் வேலை செய்து கொண்டிருந்த போது அவனின் அண்ணன் மதி அங்கு நுழைந்தான்.

    “டேய் விழியா எங்கடா போன? அம்மா நீ கலையில எழுந்ததும் சாப்பிடாம செய்யாம, வீட்லையும் யார்கிட்டயும் சொல்லாம ஊர் சுத்த போயிட்டன்னு ஒரே வசவு. அப்படி எங்க போன நீ?” எனக் கேட்டான்

     “முக்கியமான ஒருத்தரை பார்க்க போனேன் மதி, நீ சாப்பிட்டியா? எத்தனை நாள் லீவுக்கு வந்திருக்க. அண்ணி எங்க, மாடியில தான் இருக்காங்களா?” என அவனின் பேச்சை திசை திருப்ப முனைந்தான்.

    “டேய் நல்லவனே எதுக்கு பேச்சை மாத்துற? முக்கியமானவங்களா! எனக்குத் தெரியாம யாருடா அந்த முக்கியமானவங்க?

       சென்னையில் வேலைக்கு போகமாட்டேன்னு சொல்லிட்டியாமே. இங்க இருந்து என்னடா பண்ணப்போற?” என அவனுக்கு பக்கவாட்டில் இருந்த கட்டிலில் அமர்ந்தபடி கேட்டான் மதி.

     அவன் அவ்வாறு கேட்டதும், ‘இன்னைக்கு இல்லைன்னாலும் இன்னும் இரண்டு நாளில் எலெக்சன் வேலை ஆரம்பிக்கும் போது வீட்டுக்கு தெரிஞ்சுதானே ஆகணும். இன்னைக்கே மதிக்கிட்ட சொல்லிடலாம்.என நினைத்து சற்று நேரம் அமைதியாகிவிட்டான்.

     எதுவோ தன்னிடம் பெருசாக பேச போறான் என்று அவனின் ஆழ்ந்த சிந்தனை தோய்ந்த முகத்தை பார்த்தே உணர்ந்தவன் சொல்லட்டும் கேப்போம் என மதியும் பொறுமை காத்தான்.

    “மதி, நான் எலெக்சன்ல நிக்கப் போறேன்.எனச் சொன்னான் விழியன்.

   “என்னடா சொல்ற! போச்சு போச்சு... உனக்கு யாருடா இப்படி எல்லாம் யோசிக்க ஐடியா கொடுத்தாங்க?”

    என்ன பேக்ரவுண்ட் நம்மகிட்ட இருக்குதுன்னு நினச்சு நீ அரசியலில் இறங்க போற? இருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் இல்லாம போயிடும்டா!

   என்கிட்ட நீ எலெக்சன்ல நிக்கப்போறேன்னு சொன்னதை அம்மா அப்பாகிட்ட நான் சொன்னேன்... அம்புட்டுத்தான் உன்னைய உண்டு  இல்லைன்னு ஆக்கிடுவாங்க.

      நீ அப்பாவை போல கடை எடுத்து நடத்த போறேன்னு சொன்னதே  அம்மாவுக்கு பிடிக்கலை

  இருந்தாலும் தாத்தாவும் அப்பாவும் அவங்களை சமாதானப்படுத்துனதுனால அதையாவது உருப்படியா செய்யட்டும்னு சமாதானமாகி இருக்காங்க. இப்போ இது மட்டும் தெரிஞ்சது அம்புட்டுத்தான்! வீட்டுல ஒரு கலவரமே நடக்கும்! விழியா, ஏன்டா இப்படி எல்லாம் யோசிக்கிற?” எனக் கேட்டான்.

    “மதி எனக்கு சென்னையில் வேலை செட் ஆகலை. அதைவிட எனக்கு வருமானம் இரண்டாம் பட்சம்தான். மூனுவேளை யார் கையையும் எதிர்பார்க்காம சாப்பிடணும் அதுக்கு சம்பாதிச்சா போதும்.

     உனக்கே தெரியும் நான் ஸ்கூல் படிக்கிறப்போ இருந்து என்னைய சுத்தி இருக்கிற பிரச்சனைகளை கண்டுக்காம ஒதுங்கிப் போக முடியாம பேசி பிரச்சனை ஆகியிருக்கு,

      சென்னையில வேலை செய்ற இடத்தில் மட்டும் என்னால எப்படி எதுவும் கண்டுக்காம என்னோட வேலை மட்டும் பார்க்க முடியும்.

    அங்கேயும் ஹெச்.ஆர் கூட பிரச்சனை, சீனியர் இருக்கும் போது ஹய்யர் அத்தாரிட்டிக்கு தெரிஞ்சவங்கன்றதால வேறவங்களுக்கு பிரமோசன் கிடைச்சது

     அதனால பாதிக்கப்பட்ட கொலீக் குமாருக்காகவும் பேசி, அங்கயும் மேல் இடத்தோட பிரச்சனை ஆகுது. இன்னும் நிறைய அங்க எனக்கு பிரச்சனை இருக்கு. எனக்கு சென்னை வேலை எல்லாம் செட் ஆகலைஎன்றான்

    அதனைக்கேட்ட மதி, “டேய் நீ சின்னப் பையனா இருந்தப்போ, உலகம் தெரியல. இப்பவும் அப்படி இருந்தா எப்படி விழியா? கொஞ்சம் நெளிவுசுளிவோட நடந்துகிட்டாத்தான் பிரச்சனையில் மாட்டாம பீஸ்புல்லா வாழ முடியும்.

    சென்னை வேலைக்கு போகாட்டி கூட விடு. அப்பாவைப் போல ஹோட்டல் பிஸ்னஸ் பண்ணு. நல்ல கடையா தேடு, முன்னபின்ன இருந்தாலும் நானும் இருக்குறேன் சமாளிச்சிடலாம்

    ஆனா, இந்த எலெக்சன்ல நிக்கிறேன் அரசியலில் குதிக்கிறேன்னு எல்லாம் பேசாதடா. நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்துவராது.

    மொள்ளமாரி, ரவுடி, கொலைகாரன், கொள்ளைக்காரன் தான் இப்போ அரசியல் பண்ண முடியும்

     முதலில் எலெக்சன்ல நிக்கணுன்னா காசு நிறைய செலவழிக்கணும்.    அவனவன் ஓட்டுக்கு தலைக்கு ஐநூறு, ஆயிரம் கொடுக்கிறான்.

     நீ அப்படி செலவழிக்காட்டியும் கூட்டம் திரட்ட, அடியாட்கள் போல ஆட்களை பக்கத்தில் வச்சுக்க சாப்பாடு, சரக்கு, அடிதடி, போலீஸ் கேஸு இதெல்லாம் பார்க்கணும்.

     நம்மளால முடியாதுடா! சொன்னா கேளு, இந்த நினைப்பை இத்தோட மறந்திடு.என்றான்.

    மதியை விழியனிடம் பேசச்சொல்லி அனுப்பிய அவர்களின் அம்மா வேணி, ‘என்ன தான் பேசுறாங்கன்னு போய் கேப்போம்என அங்கு வந்தார்.

    ‘அடிதடி, போலீஸ் கேஸு இதெல்லாம் நம்மளால் முடியாதுடா, சொன்னா கேளு. இந்த நினைப்பை இத்தோட மறந்திடுஎன மதி விழியனிடம் பேசியதை மட்டும் உள்வாங்கிக்கொண்டு உள் நுழைந்தார்.

    “என்னடா! என்ன பிரச்சனை? போலீஸ் கேஸ் ஆகுற அளவு என்னடா பண்ணினான் விழியன்?” என மதியிடம் கேட்டவர்,

   “டேய் விழியா, நம்ம வீட்டுல இதுவரை யாரும் போலீஸ் ஸ்டேசன் வாசல்படி மிதிச்சது இல்லடா. நாலுபேரு முன்னாடி கெளரவமா வாழ்ந்துட்டு இருக்கோம்.என்றார்.

     அவர் அவ்வாறு சொன்னதும், “அம்மா என்னமா நீங்க? போலீஸுன்னா ஏன்மா பயப்படுறீங்க? நான் ஒன்னும் தப்பு பண்றவன் கிடையாதும்மா, தப்பு பண்றவங்களை எதிர்த்து கேள்வி கேக்கிறவன்மா.என்றான்.

     “அதை எதுக்கு நீ கேக்கணும்ன்னுதான் நான் வருத்தப்படுறேன் விழியா

    நம்ம பொழப்பு, ஜோலியை பார்த்துட்டு துஷ்டனை கண்டா தூரமா ஒதுங்கி போயிடாம, குறுக்கபோய் விழுந்து பிரச்சனையை உன் தலைமேல ஏன்டா இழுத்துக்குற?

   படிச்சு முடிச்சோமா, ஒரு உத்தியோகத்துல உட்கார்ந்தோமா, நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் செய்து வாழ்க்கையில செட்டில் ஆனோமான்னு நீ இருந்தா என்னவாம்? உன் கூட பொறந்தவனை பார்த்தாவது உனக்கு புத்தி வரலையா?” என்றார்.

     “அதுதான் உங்க ஆசையை நிறைவேத்த உங்க பெரிய மகன் இருக்கான்ல. என்னையும் அப்படியே இருன்னு சொல்லாதீங்க. நான் கல்யாணம் பண்றதை பத்தி எல்லாம் யோசிக்கறதா இல்லை. எலக்சன்ல நான் நிக்கப் போறேன்.என்றான்.

   “எடு அந்த துடப்பக்கட்டைய! நானும் போனாப்போகுது போனாப்போகுதுன்னு பார்த்தா நீ ரொம்ப ஓவராத்தான் போற...

    மதி, நீ இப்போ உடனே உங்க அப்பாவுக்கு போனை போட்டு வீட்டுக்கு வரச்சொல்லு. இவனை இப்படியே விட்டா உருப்புடாம போயிடுவான்என்றார்.

    “இருங்கம்மா... அப்பாவை எதுக்கு டென்சன் பண்ணனும்? நாமளே பேசுவோம் அதெல்லாம் கேட்பான்என்ற மதியிடம்

    “இல்ல மதி, நான் எல்லா ஏற்பாடும் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இனி பின்வாங்க மாட்டேன். அன்னைக்கு ஹோட்டல் லீஸ் எடுக்க எம்.எல்.ஏ வீட்டுக்கு போனப்ப, அங்க கட்சிக்காரங்க கூட அந்த எம்.எல்.ஏ அகத்தியன் பேசுனதை கேட்டுட்டு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

    இந்த எலெக்சன்ல அந்த அகத்தியனோ, அவனைப்போல மத்த அரசியல்வாதிகளோ நம்ம ஏரியாவில் எம்.எல்.ஏ ஆகக்கூடாது.என்று தொடர்ந்து பேசப்போனான்.

    அவனை கண்டுகொள்ளாது அவனின் அம்மா, “மதி, நீ பொண்டாட்டியோட வந்திருக்குற நேரம் வீட்டில் இவனால பிரச்சனை வேணாம்னு அமைதியா பேசலாம், சொல்லி திருத்தலாம்ன்னு நினச்சேன்.

     ஆனா இவன், என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறான். இரு நானே, அந்த மனுசனுக்கு போன் பண்ணி வரச் சொல்லி இவனை என்ன ஏதுன்னு கேக்க சொல்றேன்.

      என்று ஹாலுக்கு சென்று அங்கு வைத்திருந்த தனது மொபைலை எடுத்து தனது கணவருக்கு போன் செய்து, வீட்டிற்கு உடனே வரச்சொல்ல முனைந்தார்.

     அப்பொழுது விழியனின் மொபைலுக்கு கதிரிடம் இருந்து போன் வந்தது. அதை அட்டன் செய்த விழியன்,

    கொஞ்சம் பொறு கதிர். இங்க கொஞ்சம் பிரச்சனை ஆகிருச்சு. பேசி சரி பண்ணிட்டு வாரேன்என்றான்.

   அவன் கதிரிடம் பேசியதை கவனித்த மதி, “டேய் விழியா, யார்கிட்ட கதிர்கிட்டதான பேசுன? அவனும் உன்கூட சேர்ந்துகிட்டு உன்னை போலவே பேசுவான். உன்னை ஏத்தி விடுறதே அவன் தான்.என்றான்.

   அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தொடர்ந்து நோட்டிபிகேஷன் விழியனின் மொபைலுக்கு வந்துகொண்டே இருந்தது.

   ஸ்ரீராமை அந்த குரூப்பில் விழியன் ஆட் பண்ணவில்லை. இருந்தாலும் இவர்களின் நட்பு வட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீராமுக்கும் தெரிந்தவர்கள் ஆதலால் விஷயம் அவனுக்கு சென்று விட்டது

     எனவே விழியனுக்கு அவனிடம் இருந்து மொபைல் அழைப்பு வந்தது. ‘ச்சே இவன் வேறஎன கட் பண்ணிய மறு செகண்டு திரும்பவும் ஸ்ரீராம் அழைத்தான்

      ‘அவனுக்கும் விஷயம் தெரிந்திருக்கும், சரி என்னதான் சொல்றான் பார்ப்போம்என நினைத்து அழைப்பை ஏற்றான்.

     “விழியா என்னடா பண்றீங்க? பசங்க என்னென்னமோ சொல்றாங்க! நீ சுயேட்சையா எலக்சன்ல நிக்கப்போறதா கேள்விப்பட்டேன்!

     காலையில் பார்த்தப்போ கூட என்கிட்ட எதுவும் நீ சொல்லலையே, இப்படி எல்லாம் நீங்க செய்தா எம்.எல்.ஏ ஹோட்டலை நமக்கு லீசுக்கு குடுக்க மாட்டார்டா.

     நான் சாவடிக்கு வரேன், நீயும் வா இப்போவே இதுக்கு பேசி நமக்குள்ள ஒரு முடிவு எடுக்கணும். உங்களை நம்பி ஒரு காரியத்தில் நான் இறங்குனதுக்கு நல்லா வச்சு செய்றீங்கடா!எனச் சொன்னான் ஸ்ரீராம்

   விழியன் அவனிடம் வீட்டு நிலவரம் சொல்ல இஷ்டப்படாததால், “நானும் உன்கிட்ட பேசணும் ஸ்ரீ. வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு நான் உன்னை கூப்பிடுறேன்.எனச்சொல்லி மொபைல் இணைப்பை துண்டித்தான்.

    ஏற்கனவே விழியனின் அப்பா அறிவழகன் வீட்டிற்கு வரும் நேரம் ஆதலால், வீட்டிற்கு அருகில் தனது டூவீலரில் வந்ததால் தனது மனைவியின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.

   வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி தனது போனில் மிஸ்டு காலில் அழைத்தது தனது மனைவி என அறிந்து கொண்டார்.

    எனவே வீட்டிற்குள் நுழையும் போதே, “வேணிவேணி, எதுக்கு போன் போட்ட? நான் வீட்டு கிட்ட வந்துட்டேன் அதுதான் போனை அட்டன் பண்ணலை.

     என ஹாலில் அமர்ந்திருந்த தனது மனைவியிடம் சொன்னவர், அவரின் முகம் பார்த்து எதற்கோ மிகவும் கோபத்தில் அவள் இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டார்.

    தனது கணவனைக் கண்டதும் விழியனின் எண்ணத்தை அவரிடம் கொட்டி, “நீங்க பேசுங்க அப்போதுதான் அவன் வழிக்கு வருவான்.என்றார்.

   நடந்த விஷயங்களை கேள்விப்பட்டவர் ஹாலில் அமர்ந்தபடியே சத்தமாகவிழியா... இங்க வா!” என உறுமினார்.

   “போச்சு... அப்பா கோபமாயிட்டாங்க. போடா விழியா போ கூப்பிடுறாங்க, என்ன சொல்லி சமாளிக்க போறியோ?” என்றான் மதி.

   சிறுவயதில் இதே போன்ற கண்டிப்பான அப்பாவின் குரலை கேட்டிருக்கிறான் விழியன். ஆனால் அவன் ஓரளவு வளர்ந்த பிறகு இதுபோல பேசாமல் சற்று பொறுமையாகவே  பேச ஆரம்பித்துவிட்டார்.

    இப்பொழுது கேட்ட அவரின் குரலில் இருந்த கோபத்தில் மனதினுள் கொஞ்சம் பயம் ஏற்படவே செய்தது விழியனுக்கு. அது அவரின் மேல் இருந்த அன்பு, மரியாதையின் பொருட்டு உண்டான பயம். ஹாலுக்கு வந்தவனிடம் அவனின் அப்பா கூறினார்.

    “விழியா, உனக்கு இரண்டு சான்ஸ் தான். ஒன்னு நாங்க சொல்றபடி கேட்டு சென்னை வேலைக்குப் போகணும், அல்லது நீ சொன்னேல்ல ஹோட்டல் நடத்தப்போறேன்னு அதை செய்யணும்.

    ஆனா, மூணாவதா இப்போ உன் அம்மாகிட்ட சொன்ன பாரு எலக்சன்ல நிக்கப் போறேன்னு, அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். நாங்க சொல்றதை எல்லாம் கேக்கவே மாட்டேன், எலக்சன்ல நின்னுதான் ஆவேன்னு இருந்தா அதுக்கு பிறகு என் கிட்ட எதுக்கும் வந்து நிக்க கூடாது.

   அதே போல நம்ம வீட்டுக்குள் இருந்துகிட்டு அரசியல் பண்ணினா வீடுவரை பல பிரச்சனைகள் வரும். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

     தேர்தல், கட்சி, சண்டை, போலீஸ் இதுக்கெல்லாம் இங்க இடம் இல்லை. அதனால நாங்க சொல்றதை கேக்காம தேர்தல்ல நின்னேன்னா நம்ம வீட்டுல நீ இருக்க வேணாம். இப்போ சொல்லு உன் முடிவை!என்றும் கூறினார்.

   இதை விழியனோ, அவனின் அம்மா வேணியோ, ஏன் மதியும் கூட எதிர்பார்க்கவில்லை

   “அப்பா...” என்று அதிர்ந்து போனான் விழியன்.

    “நீ இப்போ எடுத்திருக்குற இந்த முடிவில் எனக்கு சுத்தமா உடன்பாடு இல்லை விழியா. அதே போல, உன்னால உன் விருப்பத்தை மாத்திக்க முடியாட்டி இதை தவிர்த்து என்னால வேற முடிவும் எடுக்க முடியாது.எனச் சொன்னார்.

   அவரிடம் பதில் எதுவும் சொல்லாமல் விழியன் வீட்டை விட்டு வெளியில் கோபத்துடன் வந்துவிட்டான்.

    அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அதுவும் விரைவில் உடனே முடிவெடுக்க வேண்டிய சூழலில் அவன் இருந்தான்.

  எனவே, தனிமையான ஓர் இடத்தில் உட்கார்ந்து சிந்தித்து ஒரு முடிவெடுக்க கிளம்பினான்.

***

                                            ---தொடரும்---

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib