anti - piracy

Post Page Advertisement [Top]

                                                             

            ------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்-03

 

 

 கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து இறங்கிய தீரமிகுந்தன் தனது கண்களை நாலாபுறமும் அலைய விட்டபடி முன்னேறினான்.

 

தீரமிகுந்தனின் தாய் இறந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் தீரன், ப்ராங்கிடம் தனது தாய் இறந்த துக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள மாறுதல் தேவை என்பதால் தான், இந்தியா சென்று பணி செய்ய ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தான்.

 

ஆனால் அவன் ப்ராங்கிடம் கூறாத காரணம் ஒன்றும் இருந்தது அது அவன் அம்மா பத்மினி இறக்கும் போது அவனிடம் விட்டுச்சென்ற குறிப்புகளே!

 

தனது அம்மா இறந்து அவரை அடக்கம் செய்த மறுநாள் தனிமையில் இருந்த தீரனுக்கு, தனது அன்னையின் நினைவே அதிகம் வாட்டியது. கடைசியாக தன்னிடம் சொல்ல நினைத்த செய்தி எதுவாக இருக்கும் என்று யோசித்தவன், ஹாஸ்பிடலில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தனது அன்னையின் ஹேண்ட் பேக்கை எடுத்து அதில் தனக்கு எதுவும் சேதி விட்டுவிட்டு போயிருகிறார்களோ? என்று ஆராய்ந்தான்.

 

ஒரு பேங்கின் லாக்கர் சாவியிருந்தது. அவன் சிறு வயதாக இருக்கும் போதே, அவனது பேரில் ஒரு பேங்க் லாக்கர் ஓபன் செய்தது நினைவில் வந்தது. எதுக்கு அம்மா? என்று தீரன் கேட்டபோது நீ பெரியப் பையனாகும் போது சொல்றேன்என்று கூறியதும் அவனின் ஞாபகத்தில் வந்தது.

 

அந்த லாக்கர் சாவியுடன் இணைக்கப்பட்டிருந்த கீ செயினில் குட்டி பாக்கெட் டைரி ஒன்று கோர்க்கப்பட்டிருந்தது. அதில் அச்சாவி தீரனின் லாக்கர் சாவி என்றும் அதன் சீரியல் நம்பரும் பாஸ்வர்டும் எழுதப்பட்டிருந்தது.

 

அதை பார்த்த தீரனுக்கு தனது அம்மா தனக்காக அந்த லாக்கரில் ஏதோ ஒன்றை விட்டுப் போயிருகிறாள் என்று தோன்றியது. அம்மா தன்னிடம் சொல்ல நினைத்தச் சேதியைப் பற்றி அதில் ஏதாவது குறிப்பு கிடைக்குமோ?! என்ற எண்ணமும் எழுந்தது.

 

அந்த எண்ணம் தோன்றிய மறுநிமிடமே தனது கார்க் கீயை எடுத்தவன், அந்த லாக்கர் கீயுடன் வங்கிக்குச் சென்றான்.

 

அவன் சென்று தனது அக்கவுன்ட் நம்பரை கூறிய மறுநிமிடம் அவனுக்கு அவன் லாக்கரை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டதும், அதில் என்ன இருக்கிறதோ? என்ற எதிர்பார்போடு சென்று லாக்கரை திறந்தான்.

 

லாக்கரில் ஒரு சின்னத் தேக்கால் செய்த அழகிய வேலைப்பாடுள்ள மரப்பெட்டியும் அதன் அருகில் ஒரு டைரியும் இருந்தது. இரண்டையும் எடுத்துக் கொண்டு அம்மாவுடன் வாழ்ந்த வீட்டிற்கு வந்து அந்தப் பெட்டியை திறந்து பார்த்தான் தீரன்.

 

அவனின் தந்தை யார் என்பதையும், அவரின் முகவரியைப் பற்றியும் அந்த டைரியில் குறிப்பை பத்மினி விட்டுச் சென்றிருந்தார்.

 

சிங்கிள் பேரன்டாக தனது அம்மாவின் அணைப்பிலேயே வளர்ந்த தீரனுக்கு அவனின் தந்தையை பற்றியத் தேடல் இதுவரை இருந்ததில்லை.

 

ஒருவேளை அவன் இந்தியாவில் இருந்திருந்தால் உன் அப்பா யார் என்ற மற்றவர்களின் கேள்வியில் அவனுக்கும் அவரை பற்றிய தேடல் இருந்திருக்குமோ என்னவோ!

 

அவனின் நியாயமான தேவைகள் அனைத்தையும் அவன் அம்மா நிறைவேற்றி கொடுத்ததினாலேயோ என்னவோ அவன் தந்தையைப் பற்றிய கேள்வியைத் தனது அம்மாவிடம் கேட்கவே இல்லை.

 

அவனின் சகவயதுப் பையன்களின் அப்பாக்களை பார்க்கும் போது தன்னுடைய அப்பா யார் என்ற கேள்வி எழுந்தாலும் அவன் மனதுக்குள்ளேயே தனது அம்மா கூறிய உன் அம்மாவும் நானே! அப்பாவும் நானே! உன் அப்பாவிடம் என்னென்ன கேட்கணும் என்று நினைக்கிறாயோ அதெல்லாம் என்னிடம் கேள். நான் நிறைவேற்றிக் கொடுக்கிறேன்என்று கூறியதை நினைவில் கொண்டு, “மை மாம் இஸ் ஆல்சோ மை டாட்”. என்று தனக்குதானே கூறி அப்பாவின் தேடலை தவிர்த்திருந்தான்.

 

அவனின் அம்மாவின் மறைவுக்குப் பின் லாக்கரில் இருந்த போட்டோவில் அவனின் அம்மாவும் அப்பாவும் இருந்தனர் அவனின் அப்பாவை பார்த்தவன் அவரின் டிட்டோவாக இருந்த தனது உருவத்தை கண்ட உதடுகள் அவனை அறியாமலே டாட் என்று முணுமுணுத்தது. மேலும் அந்த புகைப்படத்தில் அவன் அம்மா அணிந்திருந்த நகைகள் இப்பொழுது அவன் கையில் இருந்தது.

 

அந்த நகை பத்மினிக்கு அவரது மாமியார் கொடுத்தப் பரம்பரை நகை. அவரின் தந்தை ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்களின் குடும்பத்தின் பாரம்பரிய நகை அந்த நகை என்றும் அதில் உள்ள கற்கள் அனைத்தும் விலை அதிகமுள்ள வைரங்கள் என பத்மினி தீரனுக்காகக் குறிப்பு எழுதி வைத்திருந்தார்.

 

அதில் இருந்த தங்க நிற வைரக்கல் விலை அதிகமுள்ளது. உலகத்தின் அரிதான அந்த வைரம் அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமானது. அவர்களின் குடும்பத்தின் முதல் ஆண் வாரிசுக்கு வரும் மனைவிக்கு அவர்களின் மாமியார்கள் அதனை பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொடுக்கச் சொல்லி கொடுக்கப்படும் ஆபரணம் அது.

 

அவனின் தந்தை அவரின் வாரிசாக தீரமிகுந்தனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த நகையை தீரன் உரிமை கொண்டாட வேண்டும் என்றும், இல்லையேல் அதனை அவரிடமே ஒப்படைத்து விடச் சொல்லியும் அவனது அம்மா குறிப்பு எழுதி வைத்திருந்ததார்.

 

எனவே தனது அம்மாவின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்துடன் இந்த பயணத்தின் போது தனது தந்தையைக் கண்டறிந்து அவரை சந்திப்பதற்காகவும் அவன் இந்தியா வந்திருந்தான்.

 

ஆனால் அவன் உறவுகளை தேடி இந்தியா வரும் விஷயம் ப்ராங்கிற்கு தெரிந்தால் கட்டாயம் ப்ராங் தன்னை இந்த வேலையில் ஈடுபடுத்த மாட்டான் என்பதை தீரன் உணர்ந்திருந்தான்.

 

இந்தியாவின் மீதும் அவனின் இனத்தின் மீதும் தீரனுக்கு சிறு ஒட்டுதல் இருப்பதாக தெரிந்தால் கட்டாயம் அவனை இந்த ப்ராஜெக்டில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பான் ப்ராங்.

 

தீரனுக்கு தமிழ்நாடு என்றாலே அலர்ஜி என்றும், அவனுக்கு அந்த கலாச்சாரம் ஒத்து வராதென தனதுக் குழந்தை பருவத்தில் இருந்து நண்பனாக இருக்கும் தீரனின் வாயினாலேயே கூறக் கேட்டிருந்த பிராங், இந்தப் ப்ராஜெக்ட்டை அவனிடம் கொடுக்கக் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.

 

அதில் தான் பிராங் முதல் தவறு செய்தான். தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியை ப்ராங் உணராமல் விட்டுவிட்டான்.

 

அமெரிக்க மக்கள் அறிந்த பாரம்பரியமிக்க தொழில் குடும்பங்களின் வரிசையில் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்த ப்ராங்கின் குடும்பத் தொழிலான இரும்பு எஃகு தொழிலை, ப்ராங் தலை எடுத்தப் பிறகு திரும்பவும் ஏற்றத்தில் அடியெடுத்து வைத்தது.

 

அவ்வாறு ப்ராங் வெற்றிகரமாக தங்களின் குடும்பத் தொழில்களுடன் மற்ற தொழில்களையும் எடுத்து செய்து அதில் வெற்றியும் பெற்று, மற்ற தொழில் அதிபர்களின் கவனத்தையும் ஈர்த்தான்.

 

பொது ஜன மக்களின் பார்வையில் வேண்டுமானால் ப்ராங் ஹீரோவாக தெரிந்தான். ஆனால் மற்ற தொழில்துறை ஜாம்பவான்கள் ஹீரோவாக பார்த்தது பிராங்கின் மூளையாக செயல்பட்டத் தீரனைத் தான்.

 

தங்களின் தொழில் எதிரியான ப்ராங்கை வீழ்த்த வேண்டுமானால் அவனின் மூளையாக செயல்படும் தீரமிகுந்தனை ஒழித்தாலே போதும் என்பதை உணர்ந்த பிராங்கின் தொழில் எதிரிகளால் தீரன் நிறைய தடவை ஆபத்தின் விளிம்பை எட்டிப் பார்த்திருக்கிறான்.

 

தீரனின் உயிருக்கு ஆபத்திருப்பதை உணர்ந்த ப்ராங் ஆடிப் போய் விட்டான். தனக்கு அவனின் துணை எவ்வளவு முக்கியமானது என்பதனை உணர்ந்தவன் அவன். எனவே தீரனுக்கு எப்பொழுதும் அவனை சுற்றிப் பாதுகாப்பு வளையத்தைக் கொண்ட குழுவை ஏற்படுத்தி இருந்தான்.

 

தீரன் ப்ராங்கிடம் அவ்வாறு ஏற்படுத்தியப் பாதுகாப்பு ஏற்பாட்டால் தனதுச் சுதந்திரம் பாதிக்கபடுவதாகக் கூறி அதனை விலக்கிவிடச் சொன்னான்.

 

மேலும் தன்னுடைய பாதுகாப்பை தன்னுடனே இருக்கும் இமாமி பார்த்துக் கொள்வான் என்றும் அவனிடம் கூறினான் தீரன். எனவே பிராங் தீரனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் வராதவாறு தான் அவனுக்கு போட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை கொஞ்சம் தள்ளியே வைத்திருந்தான்.

 

தீரன் சொன்னதுப் போல அதை முற்றிலும் விளக்கவும் இல்லை. ஏனெனில் தீரனை கொல்ல முயன்றவர்களால் இமாமியைத் தாண்டி அவனை அணுக முடியவில்லை.

 

தோல்வியைத் தழுவியவர்கள் தங்களது யுத்தியை மாற்றிக் கொண்டு தீரனை விலைக்கு வாங்க முயன்றனர். ஆனால் தீரமிகுந்தன் திமிராக தன்னை விலை பேச முயன்றவர்களின் பணத்தினை இகழ்ச்சியோடு ஒதுக்கினான். அவர்களிடம் ஆணவத்தோடு தன்னை விலைப் பேசும் அளவு பணம் இன்னும் உலகத்தில் ஒருத்தனுக்கும் இல்லைஎன்றான்.

 

தான் நினைத்தால் அவர்கள் தனக்குக் கொடுக்கும் பணத்தை ஒரு சில வாரங்களிலேயே சம்பாதிக்கும் திறன் உள்ளதாகக் கூறி திருப்பியனுப்பி விட்டான்.

 

தீரனை விலைப் பேச முயன்றதை தன்னுடைய ஆட்களால் பிராங் அறிந்திருந்தான். எனவே தீரனைத் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள அவனுக்கு தனக்கு நிகராக சுக போக வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தான் பிராங்.

 

இப்பொழுது தீரன் இந்தியா செல்வதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்திருந்தான். மேலும் அவன் இந்தியாவை அடையும் முன்பே அவன் அங்கு தங்க தனி பிளாட். சகல சௌகரியத்துடன் பாதுகாப்பு வளையத்துடன் ஏற்பாடு செய்திருந்தான்.

 

தீரன் வந்து இறங்கியதுமே அங்கு அவன் வருவதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த தொழில்துறை அமைச்சர் ரங்கநாதன் காத்திருந்தார்.

 

உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதி தன்னைச் சந்திக்க வருகிறான் என்றால் ஏதேனும் பெரிய தொழில் ப்ராஜெக்ட் நம் நாட்டில் ஆரம்பிக்கவே இருக்கும் என்ற அனுமானத்தில், அதில் நாட்டுக்கும் அப்படியே அவர் வீட்டிற்கும் கொஞ்சம் ஆதாயம் பார்க்கலாம் என்ற ஆவலில் தீரனை சந்திக்க விமான நிலையத்திற்கே வந்து தீரனை வரவேற்க சந்தன மாலையோடு காத்திருந்தார்.

 

விமான நிலையத்தில் தீரனின் கால் பட்டவுடனே அவனை நோக்கி அவன் பாதுகாப்புக்கு நியமிக்கபட்டிருந்த இருவர் விரைந்து வந்து சார்! என்று சல்யூட் செய்து, வி ஆர் அப்பாய்ன்டென்ட் பை சி.என்.ஜி பார் யுவர் செக்யூரிட்டிஎன்று கூறியவர்கள், “கார் ரெடியாக ஏர்போர்ட் வாசலில் இருக்குதுஎன்று கூறினார்கள்.

 

அப்பொழுது சந்தன மாலையோடு தன் கட்சி பிரமுகர்கள் இருவருடன் மினிஸ்டர் ரங்கராஜன் தீரனை நெருங்குவதை கண்டு அவனுக்கு அரணாக நிற்க முயன்ற செக்யூரிட்டீசை தீரன் கண்களாலேயே தடுத்தான். தீரன் மினிஸ்டரை நோக்கி தானும் இரண்டு எட்டு வைத்து அவருக்கு கைகுலுக்க கையை நீட்டினான்.

 

தீரன் இந்தியா வரும் முன்னேயே அவன் இந்தியாவில் சந்திக்க வேண்டிய நபர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் முதலியவற்றை நன்கு அலசி ஆராய்ந்திருந்தான். அவ்வாறு அவன் சந்திக்க முடிவெடுத்து ப்ராஜெக்டை செயல்படுத்துவதில் முக்கியமானவர் மினிஸ்டர் ரங்கராஜன்.

 

அவரிடம் தான் இட்டுக்கட்டித் தயாரித்துள்ள உண்மைக்குப் புறம்பான எதிர் கால வளர்ச்சி புள்ளி விபரங்களை தக்க ஆதாரத்துடன் காண்பித்து தமிழ்நாட்டின் காவேரி ஆற்றுப் படுகைகளின் ஆழத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதாகவும், அதனை எடுத்து சந்தை படுத்துவதன் மூலம் இந்தியா அரபு நாடுகளைப் போல் செல்வம் கொழிக்கும் நாடாக இன்னும் பத்து ஆண்டுகளில் மாறி விடும் என்றும், ஆனால் அவ்வாறு அக்கனிம வளங்களைப் பூமியில் உள்ளிருந்து எடுக்க ஹைடெக்னிக் மெசின்ஸ் மற்றும் யுத்திகள் தேவைப்படுகிறது.

 

அதனை எங்களின் சி.என்.ஜி நிறுவனம் சிறப்பாக உங்களுக்காகச் செய்து கொடுக்கும். மேலும் அதனை சந்தை படுத்துவதற்கு கனிம வளங்களை துறைமுகங்களுக்கும் விமானநிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு காவேரி படுகைகளில் நான்கு வழிச்சாலை அமைத்து தருவதற்கு தங்களின் நிறுவனம் முன் வந்துள்ளதாகவும், அதற்கான செலவினங்களுக்கு ஆகும் நிதியை தங்கள் நாட்டின் வங்கிகள் உங்கள் நாட்டுக்கு கடனாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்துத் தருவதாகவும் கூறி அதற்காக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை மேற்கொள்வதற்கான கோரிக்கை வைப்பதே தீரனின் முதல் வேலை.

 

தீரன் நீட்டிய கையைப் பயபக்தியுடன் பிடித்து குலுக்கிய மினிஸ்டர் ரங்கராஜன் அருகில் நின்றிருந்த தனது பி.ஏவிடம் இருந்து சந்தன மாலையை பெற்று தீரனுக்கு போடுவதற்கு திரும்புகையிலேயே தீரனின் செக்யூரிடி தனது உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த மெட்டல் டிடைக்டர் வைத்து கொஞ்சம் பொறுங்க சார்!என்று கூறுவது போல் மாலையை தடுத்தவாறு அதனை ஆராய்ந்தான்.

 

தீரன் மினிஸ்டருக்கு கை கொடுத்த மறுநொடி அவர் மாலையை வாங்க திரும்பிய அந்த நேரத்தில் தனக்கு பின் நின்றிருந்த செக்யூரிடியிடம் எதுவோ திரும்பி கேட்டான்.

 

எதுக்கு மாலையை போடுவதை தடுக்கிறஎன்று கேள்வி எழுப்புவது போல் பார்த்த அமைச்சரிடம், செக்யூரிட்டி கூறினான், “சார் பேசிட்டு இருகிறார்என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே திரும்பிய தீரன் ஓ சாரி மினிஸ்டர் ரங்கராஜன்! என் செக்யூரிடியின் ஐ டி கார்டை சரி பார்த்தேன்என்று கூறியபடி அவர் மாலை அணிவிப்பதற்குத் தோதாகத் தலையைக் குனிந்துக் காண்பித்தான்.


 ---தொடரும்---

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib