அத்தியாயம்-02
கோயம்புத்தூரிலிருக்கும் பிரபலமான அந்த கல்லூரியில் யாழிசையும் அவளது தோழி சந்தியாவும் கேண்டியனில் சாப்பிட்டுக் கொண்டே அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவர்களின் அருகே வந்த
லாவண்யா, “ஏய்...சந்தியா
ஆடிட்டோரியம் ஒபெனிங் பங்சனில் உன்னை காம்பேரிங் செய்யச் சொல்லச் சொல்லி நம்ம காலேஜ் ஹீரோ மிதுனனிடம் பிரின்சிபால் பேசிக்கிட்டு இருந்தார்.”
“நான், நம்ம ஹச்.ஓ.டி நோட்டிஸ்
போர்டில் எக்ஸாம் டைம்டேபிளை போடச் சொல்லி குடுத்ததை போடும் போது அவங்க
பேசிக்கிட்டு இருந்தததைக் கேட்டேன்.”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னைய தேடி நம் காலேஜ் ஹீரோ மிதுனன் வருவார் பாரு” என்றாள்.”
“என்னது நானா..? என்னால முடியாதுப்பா, ப்ளீஸ்... ப்ளீஸ்.. யாழ், மிதுனன் கண்ணில் படாம என்னைக் காப்பாத்து. என் செல்லமில்ல. மதியம் கிளாசை கட்டடிச்சிட்டு ஒடிப்போயிடலாம். யாழி. வா என் கூட நீயும் எஸ் ஆயிடு“ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் அவ்வாறு சொன்னதும் “அடியே ஒரு கல்யாணமாகாதக் கன்னிப்பெண்ணை பார்த்து
இன்னொரு கன்னிப்பெண் கேட்கிற கேள்வியாடீ இது”. என்றவள்,
அவள் பிடித்திருந்த கையை
உதறிவிட்டு “ஏய்... சீ... இனி
என்னையத் தொட்டுப் பேசாத, ஓ... அவளா நீ?“ என்று நக்கலாக வடிவேலு ஸ்டைலில் பேசினாள்.
“யாழி...” என்று பல்லை கடித்தபடி கடுப்புடன் அவளின் பெயரை
உச்சரித்த சந்தியாவோ “என்னை இதவிட யாராலும்
கேவலப்படுத்த முடியாதுடி. கருமம்... கருமம்... என்னைப் பார்த்து என்ன சொல்லிட்ட? உன்னை...” என்று கையில் வைத்திருந்த நோட்டை வைத்து அவளின்
முதுகில் அடிக்க ஆரம்பித்ததும்,
யாழிசை அவளின் அடியை தடுத்துக் கொண்டே, “சந்தியா நோ...
வைலன்ஸ். பேசிக்கிட்டுருக்கும் போது கையில் ஆயுதம் எடுக்கலாமா தங்கம்?”
“நீ என்னிடம் ஓடி போகலாமானு கேட்டது மட்டும் சரியா?” என்று அவளின்
அடியை தடுத்துக் கொண்டே குறும்புடன் கேட்டாள் யாழிசை.
யாழிசையின் நீண்ட மீன் போன்ற
அழகான கண்களும் பேசும் போது சேர்ந்துச் சிரிப்பதையும், உதட்டுச்சாயம் ஏதுமில்லாமலே சிவந்து குறும்பு தவழும்
அவளின் உதடு அசையும் அழகினையும், எப்பொழுதும் போல் இப்பொழுதும் கண்டு வியந்து மனதினுள் ‘இவளிடம் மட்டும் எல்லாமே அழகாக இருப்பது எப்படி..!’ என்று மனதினுள் ஆச்சரியபட்டப்படியே சந்தியா கூறினாள்.
“நான் மட்டும் பையனா பொறந்திருந்தேனா உன்னிடம் ஓடிப்போலாமானு பெர்மிசனெல்லாம் கேட்க
மாட்டேன். உன்னை அப்படியே கடத்திட்டுப் போயி..” என்று கூறி நம்பியார் ஸ்டைலில் கைகளைப் பிசைந்துக் கொண்டு சந்தியா
கொடுத்த ரியாக்சனில்,
அரண்டவாறு பாவ்லா செய்த யாழிசை, “ஏய் சீ அடங்குடீ, நீ ஒரு மார்க்கமாத்தான் இன்னைக்கு பேசுற சந்தியா. கடத்துவேன்னு
சொல்றதும், நம்பியார்
பாணியில் கைகளை பிசயறதும் பார்க்கிறப்ப பக்கா அரசியல்வாதி வாரிசு நீ என்று புரிஞ்சுக்க முடியுதுப்பா” என்றாள்.
“சந்தியா...” என்று பின்னாலிருந்து வந்த அழைப்பில் கூப்பிடுவது
மிதுனன் என்பதை அறிந்துக் கொண்ட இருவரும், ‘ஐயோ... தப்பிக்க
முடியாது போலவே’ என்று கண்களால் தோழிகள் இருவரும் பேசியபடி
“சொல்லுங்க
மிதுனன்” என்றாள் சந்தியா
அவனிடம்.
மிதுனன் மிடுக்கான தோற்றம்
கொண்டவன், தோற்றத்தில் மட்டும்
அவன் சிறந்தவன் கிடையாது, குணத்திலும்
சிறந்தவனே..!
சந்தியாவிற்கு மிதுனன் மீது
மயக்கம் உண்டு. அவள் மட்டுமல்ல கல்லூரியில் பெரும்பான்மையான பெண்களின் ஹீரோ
மிதுனன்.
யாழிசை தனது தோழி சந்தியாவின்
மனதில் மிதுனன் இருக்கிறான் என்பதை உணர்ந்திருக்கிறாள்.
மிதுனன் எம்.இ பைனல் இயர்
ஸ்டூடண்ட். கல்லூரியில் நிகழும் எந்த ப்ரோகிராம்களிலும் அவனின் பங்காற்றல் அதிகம்
இருப்பதையும், அதேபோல் ஒவ்வொரு
நிகழ்ச்சியின் போதும் அவன் அந்நிகழ்ச்சியின் சார்பாக தயாரித்து வாசிக்கும்
ஒருகுட்டி ஆர்டிகிலும் அதில் இடம் பெற்றிருக்கும்.
அதிலிருக்கும் நான்கு வரி
கவிதைகளும் அர்த்தமுள்ளதாகவும், அழகாகவும், விருவிருப்பாகவும்
தயாரித்து வாசிக்கும் பாங்கை ரசிபவர்களில் யாழிசையும் ஒருத்தி.
அவளும் சந்தியாவும் பொறியியல்
மூன்றாம் ஆண்டு மாணவிகள். தங்களின்
சீனியரான மிதுனனின் மேல் நல்ல அபிப்பிராயம் உண்டு. எனினும் தனது தோழி விரும்பும்
மிதுனன் தன்னை கடந்த சிலமாதமாக ஆர்வமாக பார்ப்பதை அவள் விரும்பவில்லை.
அந்த காலேஜில் பழைய
ஆடிட்டோரியம் இடிக்கப்பட்டு நவீனமாக பெரிய அளவில் கட்டிமுடித்து, வரும் இருபதாம்
தேதி திறக்கப்படவுள்ளது. அதனை திறந்து வைக்க வரவிருக்கும் தொழில் துறை அமைச்சர் ரங்கராஜனின்
மகள்தான் சந்தியா.
மிதுனன் சந்தியாவிடம் கூறினான், “சந்தியா, ஆடிட்டோரியம் திறந்து வைக்க வரும் உன் அப்பாவிடம் சைன்ஸ் ரிசர்ச்
லேப் ஒன்றை நம்ம காலேஜ்குள்ள கட்ட ஹெல்ப் செய்யச் சொல்லி ஓர்
அப்ளிகேசன் வைக்கப் போகிறோம்.”
“அதை நீ தான் ஸ்டேஜில் ரிக்வெஸ்டாக வைக்கணும். அப்படி நீயே கே ட்டால் உன் அப்பா சைன்ஸ் ரிசர்ஜ் சென்டர் அமைப்பதற்கு உதவ முன் வரலாம்னு பிரின்சிபால் நினைக்கிறார்.”
“அதனால நீயும் உன் ஃப்ரெண்டு யாழிசையும் சேர்ந்துதான் நிகழ்ச்சியை காம்பேர்
பண்ணப் போறீங்க. ஸ்டேஜில் பிரசன்ட் பண்ணப் போறது நீங்க மட்டும்தான்.”
உங்க பின்னாடி நான் இருந்து
என்னென்ன பேசணும், எப்படி எப்படி
பிரசன்ட் பண்ணனும்னு முழு விபரத்தையும் சொல்கிறேன்.”
“அதே போல் யாழி, எப்பவும் போல்
ஃபங்க்ஷன் உங்க பரதநாட்டியத்தோட ஆரம்பிக்கணும்னு நம்ம ப்ரின்சி சொல்லச் சொன்னார்.”
“மதியம் இருக்கிற கிளாஸ் உங்க ரெண்டு பேறால அட்டன் பண்ண முடியாது.
ப்ரோகிராம்ஸ் அரேன்ஜ்மன்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்.”
“சோ! நீங்க இரண்டு பேரும் லாபிக்கு வந்துடுங்க. நானும் நம்ம ஹச்.ஓ.டியுடன் அங்கே இருப்பேன்” என்று கூறிய மிதுனனின் பார்வை யாழிசையின் மீது
ஆர்வமுடன் படிந்தது.
யாழிசைக்கு ஒரு வயதாக இருக்கும் போதே அவளின் அம்மா தங்கேஸ்வரி விஷக் காய்ச்சலில்
இறந்து போனார். கனக்கராஜ்யின் பிள்ளையான யாழிசையின் அப்பா கணேச பிள்ளை, மேட்டுப்பாளைய
ஜமீனின் வாரிசான வானவராயனிடம் கணக்கு பிள்ளையாக வேலை பார்த்து வருகிறார்.
ஜமீனின் வாரிசான வானவராயர் சக வயதுடைய தனது கணக்குப் பிள்ளயான கணேச பிள்ளையிடம், முதலாளி தொழிலாளி என்ற உறவைத் தாண்டி நட்பாக பழகிவந்தார்.
கணேச பிள்ளையோ
தன்னுடன் பாரபட்சமின்றி பழகும் வானவராயரிடம் மிகுந்த மரியாதையும் அன்பும்
கொண்டிருந்தார்.
வானவராயருக்கு அவரது மனைவி
வெள்ளையம்மாளுக்கும் கல்யாணம் ஆகி மூன்று வருடமாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் கணேச பிள்ளையின் அம்மா தனது மருமகள் இறந்ததால் பேத்தியாகிய
யாழிசையை வைத்துக்கொண்டு, தனது மருமகள் இறந்த துக்கத்தில் இருந்த மகனை
தேற்றுவதிலும், வீட்டை
நிர்வகித்துக் கொண்டும், குழந்தை
யாழிசையையும் பராமரிக்க முடியாமல் திண்டாடுவதை கண்டார் வானவராயரின் மனைவி
வெள்ளையம்மாள்.
தனக்குப் பிள்ளை இல்லாத
காரணத்தால் பிள்ளை ஏக்கத்தை தணிக்க யாழிசையை பெரும்பாலும் தனது வீட்டிலேயே வைத்து
பராமரிக்க ஆரம்பித்தாள்.
யாழிசையின் அழகும் அன்பும் வானவராயரை
கவர்ந்ததால் குழந்தையில்லாத அவரும் அவளை அன்புடன் கவனித்துக்கொண்டார்.
“குழந்தையும் தெய்வமும்
கொண்டாடும் இடத்தில்” என்ற பழமொழிக்கு
ஏற்ப வெள்ளையம்மாள் வானவராயரின் அன்புக்கு யாழிசையும் அடிமையாகிப் போனாள்.
வெள்ளையம்மாளுக்கு யாழிசைக்கு
எட்டு வயதாகும் போதுதான் முதல் குழந்தை பிறந்தது.
கல்யாணம் ஆகி பத்து வருடம் கழித்து கருவுற்று மிகவும் கஷ்ட்டப்பட்டு தன் குழந்தையை பெற்றெடுத்த
வெள்ளையம்மாள் பிரசவத்திற்குப் பின் ஆரோக்ய குறைவின் காரணமாக அல்லல்பட்ட போது மூன்றாம் வகுப்பு பயிலும் யாழிசை தனது அன்பு அய்யா மற்றும் அம்மா
வெள்ளையம்மாளின் புதல்வியாகிய பிருந்தாவிற்கு, தோழி, அக்கா, தாய் ஆகிய அனைத்துமாகிப் போனாள்.
பிருந்தா வளர வளர அவள்
யாழிசையின் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்தாள்.
யாழிசை சிறுவயதில் அவர்களின்
ஊரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு வெள்ளையம்மாளுடன் சென்றிருந்தபோது அங்கு ஆடி
தேரோட்டத்தை முன்னிட்டு முதல் நாள் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்தவள், மறுநாள்
வெள்ளையம்மாளிடம் அங்கு தான் கண்ட பரதத்தை அபிநயம் பிடித்து காண்பித்தாள்.
அவளுக்கு நடனத்தின் மேல் உள்ள
ஆர்வத்தை பார்த்த வெள்ளையம்மாள் வீட்டிற்கே ஆசிரியரை கூட்டிக் கொண்டு வந்து அவளை பரதம் பயில வைத்தாள்.
அருகில் உள்ள பால்வாடியில் கணேச பிள்ளை தனது மகளை சேர்த்து விட்டார். ஆனால் சீருடை அணிந்து ஸ்கூல் பஸ்ஸில்
செல்பவர்களை பார்த்து அதுபோல் தானும் போகணும் என்ற மகளை கணேச பிள்ளை “அதற்கெல்லாம்
நிறைய பணம் கட்டணும் நீ இங்கேயே படி. படிகின்ற பிள்ளை எங்கு படித்தாலும் நன்றாக
படிக்கும்” என்று கூறிவிட்டார்.
அய்யாவின் வீட்டிற்கு போயிருந்த
யாழியின் வருத்தம் தோய்ந்த முகத்தை பார்த்து “ஏன் இன்னைக்கு ரோஜாப்பூ முகம் வாடியிருக்கு” என்று கேட்ட வானவராயரிடம், தனது ஆசையை யாழிசை கூறினாள்.
கணேச பிள்ளையை
கூப்பிட்டவர், அவளின்
படிப்புசெலவை தான் ஏற்பதாக தெரிவித்தார். யாழிசையை அவள் ஆசைப்பட்ட பள்ளியில் உடனே
சேர்த்துவிடும் படி கூறிவிட்டார்.
அதிலிருந்து இன்று வரை யாழிசைக்கு எது நல்லது கெட்டது என்றாலும் முன் நின்று வானவராயர் செய்தார்.
அதேபோல் தனது அய்யாவின் வார்த்தையை தட்டாமல் அவரது குடும்பத்திற்காக என்ன
வேண்டுமானாலும் செய்யும் அளவு யாழிசையும் அய்யா குடும்பத்தின் மேல் அன்பு கொண்டவளாக வளர்ந்து நிற்கிறாள்.
அன்று காலையில் எழுந்ததில்
இருந்து யாழிசை அவளது பாட்டி ருக்மணி சொல்வதையெல்லாம் எந்த மறுப்பும் இல்லாமல்
செய்துக் கொண்டிருந்தாள்.
என்னைக்கும் இல்லாத அதிசயமாய்
இன்றைக்கு அவரின் பேத்தி யாழிசை தன்னை வம்பிழுத்து கோபப்பட வைக்காமல் சமத்து பெண்ணைப் போல வேஷம் கட்டிய யாழிசையை யோசனையுடன் பார்த்துக் கொண்டே, உளுந்தங்களியை பரிமாறினார்.
தனது பாட்டி, தான் போடும் வேஷத்தை சந்தேகக் கண் கொண்டு
பார்ப்பதை உணர்ந்தவள் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி ஈ... என்று சிரித்து வைத்தாள்.
“என்ன பாப்பா
இப்படி அசட்டு சிரிப்பு சிரிச்சு வைக்கிற. பொட்டபுள்ள இப்படியா சிரிக்கிறது?” என்றார்.
உடனே கப்பென்று இளிப்பை
நிறுத்தியவள் “சரி பாட்டி” என்றாள்.
அதற்கு மேல் அவளின்
நடிப்பை பொருத்துக் கொள்ள முடியாத ருக்மணி பாட்டி, “ஆத்தீ உன் இந்த பம்மாத்தை
எல்லாம் நான் நம்பிடமாட்டேன் பாப்பா. என்ன சோலி என்னால உனக்கு ஆகணும் அதை முதலில் சொல்லு!” என்றார்.
ருக்மணி பாட்டி அவ்வாறு
சொன்னதும் “கண்டுபுடுச்சுடுவியே, நீ பெரிய சிஐடி
ஆகவேண்டியவ தாத்தாவ கட்டிகிட்டதுனால உன்ன வீட்டோடையே இருக்க வச்சுட்டாரு” என்றாள்.
உடனே அவள் பாட்டி கோபமாக வாய் திறக்கும் முன்பே,“ஓகே.. ஓகே....
உன் புருஷனை நான் எதுவும் சொல்லல இப்போ. என்னோட தேவையைக் கேளு” என்றவள், “இன்னைக்கு ஞாயித்துக் கிழமை தானே, நான் ஞாயித்துக் கிழமை அதுவுமா ஆறுமணிக்கே எழுந்து
குளிச்சு சாமி கும்பிட்டுட்டு உனக்கு சமையலில் உதவி செய்ய வந்து நீ என்னை எப்பவும் போல் பாப்பானு
கூப்பிடுறதுக்கு கோபம் வந்தாலும் பொறுத்துட்டு உன் கொண்டையை தட்டிவிட்டு அவிழ்த்து
விடாம எப்படி சமத்துப் பிள்ளயாய் இருக்கேன்.”
“அதே போல் நீயும் சமத்துப் பாட்டியா இன்னைக்கு மதியம் என் ஃபிரெண்டு சந்தியா
அவள் வீட்டுக்கு என்னை கூப்பிட வரும் போது அப்பாகிட்ட என்னைய அவள் கூட போக நீ ரெகமென்ட்
பண்ணனும், சரியா பாட்டி” என்றாள் யாழிசை.
அவள் கூறியதும் ருக்மணி பாட்டி, “இது என்ன பாப்பா புதுப்பழக்கம், சிநேகிதப்புள்ள வீட்டுக்ல்லாம் போகுறேனு கேக்குறது. அதுவும் நீ சொல்ற
அந்த சந்தியான்ற புள்ளயோட அப்பா அமைச்சருன்னு என்கிட்டச் சொல்லியிருக்கியே, அரசியல்வாதிங்க வீட்டுக்கெல்லாம் பொட்டப் பிள்ளையைய எப்படி அனுப்புறது? வேணாம்டியம்மா... நீ எங்கயும் போகவேண்டாம்.”
“உன்
அப்பாவுக்கும், வானவராயரு அய்யா வீட்டுக்கும் நான் தான் எதுனாலும் பதில் சொல்லணும். அதுவும் இல்லாம நீ வருகிற வரை என்னால
நிம்மதியா வீட்டில இருக்க முடியாதுடியம்மா.”
“காலேஜுக்கு போனோமா படிச்சோமான்னு இருக்கணும். இப்படி ஊர் சுத்துற நினைப்பு
எல்லாம் உனக்கு வரக்கூடாது பாப்பா” என்றார் ருக்மணி பாட்டி.
தனது பாட்டி கூறியதைக் கேட்ட யாழிசை முகம் சுருங்கிப் போனது. பாட்டி இதுவரை வானவராயர் அய்யா வீட்டைத் தவிர இப்படி எங்கயாவது போறேன்னு உன்கிட்ட கேட்டிருக்கேனா? சந்தியா அம்மா எவ்வளவு நல்லவங்க தெரியுமா? ஒவ்வொரு தடவையும் அவங்க காலேஜ் ஆண்டு விழாக்கு வந்துடுவாங்க.”
“நான் பரதநாட்டியம் ஆடுறதை எவ்வளவு ரசிச்சுப் பார்ப்பாங்க தெரியுமா? நிறைய தடவை சந்தியாவின் அம்மா என்னைய அவங்க
வீட்டிற்கு கூப்பிட்டுட்டு வரச்சொல்லி சொன்னதா கூப்பிடுவா. நான்தான் ஏதாவது
காரணத்தை சொல்லி போகாமல் இருந்துடுவேன்.”
“ஆனா இந்த தடவை அவ என்னை மட்டும் கூப்பிடல. எங்க காலேஜ்ல புது ஆடிடோரியம்
திறக்கிற பங்ஷனில் நாங்க ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் குரூப்பாக சேலை வாங்கறதா பிளான்
பண்ணிருக்கோம்.”
அதில நான் பரதநாட்டியம் மட்டும்
ஆடல பாட்டி, ஒரு குரூப்
டான்ஸ் வேறு ஆடுறதா இருக்கு. அதற்கு வேற காஸ்ட்யூம் வாங்கணும்னு பிளான் செய்திருக்கோம்.”
“சந்தியா அவங்க ஜவுளிகடையில் இருந்து மொத்தமா ஜவுளியெல்லாம் அவள் வீட்டிற்கே
வரவச்சிருவா. அவங்க வீட்டுக்குப் போய் எல்லோரும் மொத்தமா போட்டுப் பார்த்து கம்மியான விலைக்கே வேண்டியதை பர்சேஸ் செய்திடலாம்னு எங்க
எல்லோருக்கும் சந்தியா ஐடியா கொடுத்தா.”
எங்கூட ஆடுற மத்த பிள்ளைகள்
எல்லாம் சரின்னு சொல்றப்போ நான் மட்டும் வரலனு சொல்றது நல்லாவா
இருக்கும்?!”
ப்ளீஸ்... ப்ளீஸ் பாட்டி, இந்த ஒரு தடவை மட்டும் என்னை போகவிடுங்க. இனி இப்படி நான்
கேக்க மாட்டேன் சரியா?” என்று
கெஞ்சினாள்.
அப்பொழுது யாழிசையைத் தேடி பிருந்தா
அவள் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தபடி “யாழி.... யாழி...”என்று கத்தியபடி
வந்தாள்.
வானவராயர் அய்யாவின் மகள்
பிருந்தாவின் வருகையில் உற்சாகமான யாழிசை “ஏய்
பிருந்தாகுட்டி” என்றபடி அவளை
நாடிச்சென்றாள். பிருந்தாவின் சத்தம் கேட்டதும் அவளுக்குப் பிடித்த முந்திரிக் கொத்து பலகாரத்தை எடுத்துத் தர உள்ளே விரைந்தார் பாட்டி.
பாட்டி உள்ளே போவதைத் திரும்பி
பார்த்தபடி ஓடிவந்து “பிருந்தா இன்னைக்கு மதியம் என் ஃபிரெண்ட் சந்தியா
வீட்டுக்கு என்னைய கூப்பிட்டு போக வருகிறாள். அவள் வீட்டுக்குப் போய் எங்க காலேஜ்
ப்ரோகிராம்க்கு காஸ்ட்யூம் செலக்ட் செய்ய போறோம்.”
“இப்போ என்னை கூப்பிட சந்தியா காரில் வந்துடுவாள். அவள் கூட என்னை அனுப்ப
பாட்டியை நீ சம்மதிக்க வச்சுட்டா அடுத்த வாரம் முழுவதும் நீ என்ன சொன்னாலும் அதை
நான் செய்றேன் ப்ளீஸ் நீ சொன்னா பாட்டி என்னை விட்டுடுவாங்க பிருந்தா குட்டி என்
செல்லம்ல்ல” என்று
கெஞ்சினாள்.
“உண்மையாவே நான்
பாட்டிகிட்ட பெர்மிசன் வாங்கி கொடுத்தா, நான் சொல்றதை எல்லாம் நீ செய்வதானே, ஏமாத்திட மாட்டியே யாழி?” என்று கேள்வி கேட்டாள் பிருந்தா.
“காட் ப்ராமிஸ்.
நீ சொல்றதை எல்லாம் அடுத்த வாரம் செஞ்சு குடுக்கிறேன் பிருந்தா. நீ கேட்டால்
மட்டும் இந்த ருக்மணி பாட்டி எதுனாலும் சரின்னு சொல்லிடுறாங்க.”
“வர வர எனக்கு அவுங்கப் பாட்டியா அல்லது உனக்கு பாட்டியானு எனக்கு
சந்தேகமாகிடுது. என் பாட்டிக்கு
என்ன சொக்குப்பொடி போட்டியோ அதை எனக்கும் கொஞ்சம் சொல்லேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்
போதே,
கையில் பலகாரத்துடன் வந்த
ருக்மணி பாட்டி, யாழிசை கூறிய
கடைசி வரிகளை மட்டும் காதில் வாங்கியவள்
“ம்... நீ நம்ம முதலாளி அய்யா வானவராயருக்கும் மகராசி வெள்ளையம்மாளுக்கும் என்ன
சொக்குப்பொடி நீ போட்டியோ அதையேத்தான் அவ எனக்குப் போட்டுருக்கா” என்று கூறினார்.
யாழிசை பாட்டி
கையில் இருந்த பலகாரத்தட்டை பார்த்ததும் அதை எடுக்க கை நீட்டினாள். அவள் கைக்கு
எட்டாதவாறு அந்தப்பக்கம் தட்டை நகர்த்திய ருக்மணி பாட்டி,
“உனக்கு உள்ள
இருக்கு போய் எடுத்துக்கோ. நான் இதை புள்ளைக்கு எடுத்துட்டு வந்திருகேன்” என்றவர். பிருந்தாவிடம் “நீ சாப்பிடு தாயி” என்று கொடுத்தார்.
“ஐ… முந்திரிக்
கொத்து! எனக்கு புடிக்கும்னு தெரிஞ்சு எடுத்துட்டு வந்தீங்களா
பாட்டி?” என்று கேட்டவாறு
தட்டை கையில் வாங்கியவள் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிடுவதை பார்த்தவாறு
அமர்ந்த யாழிசையிடம் தட்டை நீட்டியபடி, “இந்தா நீயும் எடுத்துக்கோ” என்றார்.
அவளோ பிருந்தாவிடம் மெதுவாக
குசுகுசுவென்ற குரலில் “பாட்டிக்கிட்டகேளு” என்று கூறினாள்.
பிருந்தாவும் “யாழி உங்க காலேஜில் நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கூட குரூப்
டான்ஸ் ஆட போறதாவும் அதுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி ட்ரெஸ்
வாங்க போறதாவும் சொன்னீயே இன்னும் கிளம்பலையா?”என்று கேட்டாள்.
அவள் கேட்டதும், யாழிசை அவளிடம் “பாட்டி என்னைய போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க பிருந்தாகுட்டி” என்று வருத்தத்துடன் கூறினாள்.
அவளின் வருத்தமான முகத்தை பார்த்ததும், “யாழி வருத்தப்படலாமா?” என்றவள்,
“பாட்டி! ஏன்
பாட்டி அவளை போக வேண்டாம்னு சொல்றீங்க,. ப்ளீஸ்... ப்ளீஸ்
அவள் பத்திரமா போய்டு வந்திடுவாள். போன இடத்தில் சேட்டை செய்யாமல் சமத்து யாழியா
வீட்டுக்கு வந்துடுவா!”
“என்ன யாழி
பத்திரமா வந்துடுவ தானே! பாட்டி உன்னையப் போக சரின்னு சொல்லிட்டாங்க பாரு முகத்தை சிரித்தது போல் வச்சுக்கோ உன் அழுமூஞ்சியை பார்க்க சகிக்கல” என்றாள்.
“பத்திரமா சமத்தா போயிட்டு
வந்துடுவேன் பிருந்தாகுட்டி. நீ தான் பாட்டி சரின்னு சொல்லிட்டதா சொல்றியே நான் போய் கிளம்பப் போறேன். இன்னும் அரைமணி நேரத்தில் என்னைய கூப்பிட சந்தியா
வந்துடுவாள்” என்றவள் கிளம்ப
வேகமாக எழுந்து சென்றாள்.
இருவரும் தன்னை வைத்துக் கொண்டே தான் சம்மதம் கூறாமலேயே சம்மதம் கூறியது போல்
சொல்லிவிட்டு அடுத்த சோலியை மேற்கொள்ளப் போவதைக் கண்ட ருக்மணி பாட்டி, “நான் எப்போ தாயி அவளை போயிட்டு வரட்டும்னு சொன்னேன்!” என்று கேட்டதும்,
“இதோ இப்போ இப்போ
கூட அவளை போயிட்டு
வரட்டும்னு நீங்க
சொன்னீங்களே பாட்டி” என்று கூறினாள்
பிருந்தா.
“அட போக்கிரிங்களா....
என் வாயில வந்த வார்த்தையை வைத்து என்னையையே கேனச்சியாக்குறீங்களே! நீ சொல்றதால
நான் அவளை போயிட்டு வர ஒத்துக்கிறேன்.”
“அவளை நேரத்தோட விளக்கேத்துறதுக்குள்ள வீட்டுக்கு வந்துறச் சொல்லு. இது போல அடுத்த வீட்டுக்கு போறது இது தான் கடைசித் தடவையா இருக்கணும். சரி தாயி மதியம் சாப்பிட்டாச்சா? இல்ல இங்க சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார்.
“இன்னைக்கு
ஞாயிற்றுக்கிழமை அதனால என் அம்மா எனக்கு அசைவம் சமைத்து வச்சுருப்பாங்க .நீங்கதான்
அசைவம் சமைக்கவோ சாப்பிடவோ மாட்டீங்களே.
அதனால் நான் நாளைக்கு உங்க
வீட்டுக்கு சாப்பிட வருகிறேன்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியில் சென்றிருந்த கணேச பிள்ளை உள்ளே
வந்தவர்,
“வாங்க
பிருந்தாம்மா” என்று கேட்கும் போதே அவரின் காதில் வாசலில் வந்து நிற்கும் காரின் ஓசையும் கேட்டதும் “நம்ம வீட்டு வாசலில் கார் நிறுத்தும் சத்தம் கேட்குதே” என்றபடி வாசலைத் திரும்பிப் பார்த்தார்.
அந்த சமயத்தில் யாழிசையும்
வெளியில் செல்ல கிளம்பி வந்தவள் தன் அப்பாவை பார்த்ததும் தாழ்ந்த குரலில்
“என் ஃபிரெண்ட்ஸ்
தான்பா வந்திருக்காங்க. காலேஜ் டான்ஸ் ப்ரோகிராமிற்கு ட்ரெஸ் வாங்குவதற்கு
என்னையும் கூப்பிட வருகிறார்கள். பாட்டிக்கிட்ட கேட்டுட்டுத் தான்
கிளம்பியிருக்கிறேன்” என்று சொல்லும்
போதே, சந்தியா, லலிதா, காவேரி, மற்றும் யாசிகா ஆகியோர் “யாழிசை” என்றபடி உள்ளே வந்தார்கள்.
“வாங்க... வாங்க” என்று அவர்களிடம் சொல்லியபடி “அப்பா இதுதான் என் ஃபிரெண்ட்ஸ்” என்றவள் “பாட்டி எல்லோருக்கும் குடிக்க டீ எடுத்துட்டு வாங்க” என்றாள்.
வீட்டிற்கு வந்த பெண்களின்
முன்னால் வேறு எதுவும் பேச முடியாத கணேச பிள்ளை “வாங்கம்மா ட்ரெஸ் எடுக்கப் போறீங்களாமே பத்திரமா போயிட்டு வாங்க” என்றார்.
“சரி அங்கிள்” என்று கோரசாகச் சொன்ன பெண்கள்,“பாட்டி எங்களுக்கு இப்போ குடிக்க எதுவும் வேண்டாம்.
யாழிசையை நான் திரும்ப இங்க வந்து விடும் போது ஏதாவது
சாப்பிடுறோம்” என்றாள் சந்தியா.
அப்பொழுது லலிதா,“ஆமாம் நேரத்தோடப் போனா வேகமா ட்ரெஸ்
எல்லாம் செலக்ட் பண்ணி முடிச்சு சாயந்தரத்துக்குள்ள வீட்டிற்கு வந்திடலாம்” என்றாள்.
யாசிகா பிருந்தாவைப் பார்த்து, “ஏய் யாழி இது நீ சொல்ற ஜமீன் வீட்டு பொண்ணு
பிருந்தாவா? பார்க்க க்யூட்ட
இருக்கா” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும்
பிருந்தா கோபமாக “என்ன நீ உன்
தங்கச்சின்னு சொல்லாம ஜமீன் வீட்டுப் பொண்ணுனு தான் உன்
ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி வச்சிருக்கியா?” என்று கோபமாக யாழிசையை பார்த்து கேட்டாள்.
அதற்கு யாழிசை பதில்
சொல்வதற்குள் சந்தியா முந்திக் கொண்டு “ஏய்.. பிருந்தா குட்டி! அவள் உன்னை அவ குடும்பத்தில் ஒருத்தியாக
நினைத்துத்தான் எங்கக்கிட்ட பேசுவாள்.
இன்னொரு நாள் நாம நிறைய
பேசலாம். உங்க வீட்டு வாசலில் ரொம்ப நேரம் காரை நிறுத்த முடியாது. ட்ராபிக் பிரச்சனை ஆகிடும். இன்னொரு நாள் மீட் பண்ணும் போது பேசலாம். போகலாமா யாழிசை” என்று கேட்டள்.
“ம்...சரி என்றவள்
அப்பா போயிட்டு வரேன். பாட்டி, பிருந்தா குட்டி,டாட்டா” என்றபடி தனது தோழிகளுடன் சென்றாள் யாழிசை.

No comments:
Post a Comment