Post Page Advertisement [Top]

                                                                          

------------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்- 27 & 28

 வானவராயர் தன்னை கை நீட்டி அடிப்பார் என்று கனவில் கூட பத்மினி நினைக்கவில்லை. வீட்டு முற்றத்தில் அங்கங்கே வேலையாட்கள் நின்றுக்கொண்டிருக்க தன் செயலை கேவலமாகப்பேசி அடித்த அவரின் அடியால் எரிந்த கன்னத்தைவிட அவளின் மனம் தீப்பட்டதுபோல் எரிந்தது.

 

நான் ராஜேஷ் கூட சினிமா போனேன்ற காரணத்திற்காக ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லியிருந்தாலும் நான் கவலை பட்டிருக்க மாட்டேன்.

 

ஆனா உங்க கூட கல்யாணமாகி இந்த ஆறு மாசம் நான் வாழ்ந்த வாழ்க்கையில் உங்களுக்காக உங்க காதலுக்காக நான் என் உடை, பழக்கவழக்கம் அத்தனையும் மாத்தியதற்கு நல்ல பலன் கிடைச்சிருச்சு!

 

ஒரு நண்பன் கூட வெளியில் சினிமா போனதால உங்கமேல நான் வச்சுருக்கற அன்பையே இத்தனைபேர் முன்னாடி என்னைய கைநீட்டி அறைஞ்சு கேவலப்படுத்தீட்டீங்கல்ல. இத இந்த அவமானத்த என்னால மறக்க முடியாது என்று கத்திவிட்டு ரூமிற்குள் சென்று கதவடைத்துகொண்டாள் பத்மினி.

 

அவள் ரூமிற்குள் போகும் போதே ஏய்! பத்மினி என்று கூறியபடி அவளின் பின்னாலேயே ரூமிற்குள் செல்வதற்குள் கதைவடைத்துவிட்டதால் படபட வென்று கதவை தட்டினார்.

 

அப்பொழுது “தம்பி” என்றபடி வந்து அவரின் கைப் பிடித்தார் தேவகி. “அக்கா அவ செஞ்சது தப்புன்னு கூட அவளுக்கு புரியலையே! நான் அறைஞ்சத பெருசா எடுத்து பேசிட்டு உள்ளப்போயிருக்காக்கா ஏதாவது செஞ்சுகிட்டா?” என்று பதறினார்.

 

அதற்கு தேவகி, “நீவேற தம்பி நீ நினைக்கிறதுபோல அவள் தற்கொலை எல்லாம் பண்றவ கிடையாது. இப்போ நீ அவளை அடிச்சது சரிதான்.

 

அங்க ஊருல இருக்கறப்போ அவ அப்பாவோட செல்லத்தில் ஆடிக்கிட்டிருந்தா, என்னால எதுவும் செய்யமுடியல. நீதான் அவளுக்கு லாயக்கு. ரெண்டுநாளில் எல்லாம் சரியாகிடும். நீ வா உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று இழுத்துக்கொண்டு போய்விட்டாள்.

 

சாப்பாட்டில் கைவைத்த வானவராயருக்கோ இரண்டு வாய் கூட உள்ளே இறங்க மறுத்தது. தன் மேல் பத்மினிக்கு உள்ள பிரியத்தை உணர்ந்தவர் வானவராயர்.

 

ஆனாலும் அவள் ராஜேஷுடன் சினிமா போனதை அவரால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. அதுவும் ஒரு வார்த்தை கூட தன்னிடம் கேட்காமல் வீட்டின் பெரியோர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காதன் விளைவு, அவரின் காதுப்படவே மனைவியின் நடத்தையை விமர்சித்த ஊர்க்காரர்களின் பேச்சு அவரை ரணப்படுத்தியது. இத்தனைக் காலம் தன் முன் குரல் உயர்த்தி பேசக்கூட முயலாத மக்களையே இவ்வாறு பேசவைத்துவிட்ட தன் மனைவியின் செயலில் ஆத்திரம் மிக உண்டானது.

 

அதனால், தான் இப்போது இருக்கும் சூழலில் பத்மினியிடம் பக்குவமாக பேசமுடியாது என்ற எண்ணத்திலும் மேலும் கோபத்தில் அவளை இன்னும் இரண்டு அடி அடித்துவிடுவோமோ என்ற பயத்தில் வீட்டில் இரவு தங்காமல் அவரது பண்ணைக்குச் சென்றுவிட்டார்.

 

ரூமிற்குள் இருந்த பத்மினிக்கு தன் அம்மா பேசிய பேச்சு காதில் விழுந்து இன்னும் மனம் காயப்பட்டுப்போனாள். தேவகி இங்கு வந்த பிறகு சேதுபதியின் உடல்நிலையால் மிகவும் வருத்தத்தில் இருந்தாள்.

 

மேலும் பத்மினியிடம் அங்கிருப்பதுபோல் இங்கு இருக்காதே பத்தூ, அப்பாவிற்கு முடியாத நிலையில் என்னால் தனியாக அந்த ஊரில் வைத்தியம் செய்ய நான் எவ்வளவு சிரமப்பட்டேன்.

 

இந்த ஊர், நம்ம சொந்த ஜனங்க, என் தம்பி பக்கத்தில் இருப்பதால் என்னால கொஞ்சம் தெம்பா இருக்க முடியுது.

 

வீட்டு நிலைமையை புரிந்து உன்ன பெத்தவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணும் என்ற எண்ணம் இருந்தால் இந்த ஊருக்கு ஏத்தமாதிரி நீ கொஞ்சம் மாறிக்கோ என்று கூறியிருந்தார்.

 

அவளும் இத்தனை நாள் தன்னை தாங்கிய தன் தந்தையின் உடல்நிலை குறித்து வருத்தத்தில் இருந்ததால் அவளின் தந்தைக்காக என்று டெல்லியில் போடும் உடைகளில் முட்டிவரை இருக்கும் கவுன் மற்றும் மிடி ஆகியவற்றை தவிர்த்து துப்பாடவுடன் சுடிதார் மற்றும் லாங் ஸ்கர்ட் மற்றும் கையுள்ள டாப் முதலியவற்றை அணியத்துவங்கினாள்.

 

தனது தந்தையின் அருகில் அவரின் கடைசி நாட்களில் இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக இங்கேயே இருக்க ஆரம்பித்தவள் வானவராயரின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் கல்யாணத்திற்கு சம்மதம் கொடுத்தவள், அதன் பின் அவன் வாங்கிகொடுத்த புடவைகளை காதலால் என்று அப்பொழுது நினைத்தது இப்பொழுது அதுவும் தன்னை அவர்களின் அடக்குமுறைக்குள் வைத்திருக்க செய்ததாகவே அவளுக்குப் பட்டது. தான் மட்டுமே அவரை முழு அன்போடு காதலித்திருக்கிறோம்.

 

ஆனால் தனிமையில் அவரின் இச்சையை தனித்துக்கொள்ள என் மேல் அன்பு உள்ளதுபோல் நடித்துவிட்டு மற்றவர்களின் முன் அவர் கண்டிப்பாக இருந்தது இப்போ அவருக்கு தன் மேல் அன்பில்லாத செயலாக அவளுக்குப்பட்டது.

 

அத்துடன் மற்றவர்களின் முன் தன்னை அறைந்ததால் அவள் அடைந்த அவமானம் அவளுக்கு பெரிதாகப்பட்டது. ‘என் அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்னதான் கட்டிய புருசனாக இருந்தாலும் இப்படி காட்டுவாசி மாதிரி மத்தவங்க முன்னாடி என்னை அடிக்க விட்டுயிருப்பாரா?, என்று அழுகை எழுந்தது.

 

சே! இந்த காட்டுவாசிக இருக்கிற இடத்தில் நான் ஒருநிமிஷம் கூட நிற்கக்கூடாது என்று கோபத்தில் அவளுக்கு தேவையான பொருட்களை சூட்கேசில் எடுத்துப் பூட்டியவள் இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறினாள்.

 

அவ்வாறு வெளியேறிய பத்மினியை எதிர்பார்த்து, ராஜேஷ் காருடன் அந்த ஊரின் வெளியில் இருந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான்.

 

ராஜேஷ் பிளான் செய்து காய் நகர்த்தியே பத்மினியை சினிமாவுக்கு கூட்டிச்சென்றான். அவளிடம் நண்பன் என்ற போர்வையில் பழகியவன் அந்த ஊரில் இருந்த அவனின் இளந்தாரி நண்பர்களிடம் வேறுவிதமாகவே இருவருக்கும் உள்ள உறவை அவர்கள் நினைக்கும் படி பேசி வைத்திருந்தான்.

 

மேலும் அவன் சினிமாவுக்கு பத்மினியுடன் போவதை முன்கூட்டியே தன் நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தான். எனவே பத்மினி அவனுடன் வெளியில் போன மறுநிமிடம் விஷயம் காட்டுத்தீ போல் அவ்வூரில் பரவியது.

 

இவ்வாறு தான் செய்வதால் வானவராயருக்கும் பத்மினிக்கும் இடையில் சண்டை எழும் என்பதை அவன் புரிந்து வைத்திருந்தான். மேலும் தன் ஊர் பெண்கள் போல் இல்லாமல் இதெற்கெல்லாம் மனம் உடைந்து தற்கொலை செய்யக்கூடிய பெண் அவள் இல்லை என்பதுவரை அவளை பற்றி புரிந்து வைத்திருந்தவன், ஒன்றை மட்டும் அவளை பற்றிய புரிதலில் அவன் தவறிவிட்டான்.

 

அவன் ஆசைப்படி அவளை வானவராயரிடம் இருந்து பிரித்தால் தனக்கு இணங்க வைத்துவிடலாம் என்று எண்ணிவிட்டான். பத்மினி அவனுடன் நண்பன் என்ற முறையில் இயல்பாக பேசி பழகினாலும் ஓரளவுக்குமேல் இதுவரை அவனை நெருங்க விட்டதில்லை.

 

அவனின் பார்வை தவறுதலாக அவளின் மீது படிந்தால் கூட அவள் அறிந்து அவனால் அவளை ரசிக்க முடிந்ததில்லை. அவ்வாறு தன்னுடைய எண்ணம் அவளுக்கு தெரியவந்தால் அதன் பின் அவனுடன் பழகும் பழக்கத்தையே நிறுத்திவிடுவாள் என்று பயந்தே அவளிடம் நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டிருந்தான்.

 

எப்படியும் இருவருக்குள்ளும் சண்டை வந்து தன்னால் அவனில்லாமல் வாழமுடியும் என்ற அவளின் படித்த தன்னம்பிக்கை தூண்டி அவளை பெட்டியைத் தூக்கிக்கொண்டு வானவராயரின் வீட்டைவிட்டு வந்திடுவாள் என்று கணித்தே காருடன் காத்திருந்தான்.

 

அதேபோல் தூரத்தில் அவள் வருவதை கண்டதும் தன் முகத்தை சோகமாக வைத்துகொண்டு காரில் அமர்ந்திருந்தவன் அவள் அருகில் வந்ததும் காரைவிட்டு இறங்கி “பத்தூ” என்று அழைத்தான்.

 

வீட்டைவிட்டு கோபத்தில் தனியே பெட்டியோடு கிளம்பி வந்தவளுக்கு இரவு நேரத்தின் தனிமை அச்சுறுத்தியது. பத்தரை மணி கடைசி பஸ் வரும் என்ற செய்தியை அறிந்தவள் அந்த பஸ் பிடித்து கோயம்புத்தூர் வந்து அங்கிருந்து டெல்லிக்கு டிரைன் டிக்கட் எடுத்து புறப்பட்டுச்சென்று விடவேண்டும் என்றே கிளம்பி வந்தாள்.

 

ஆனால் இரவு அவளை பயமுறுத்தியது, அப்படிபட்டவளின் முன் காரிலிருந்து இறங்கிய ராஜேஷை பார்த்ததும் இருளுக்கு துணைக்கு ஆள் கிடைத்த தைரியம் அவளுக்கு வந்தது.

 

நீங்களா?” என்று கேட்ட பத்மினியிடம், “ஸாரி பத்மினி நண்பன்கிற முறையில் உன்னைய சினிமா கூப்பிட்டுட்டு போனது எவ்வளவு பெரிய தவறாகிப் போச்சு

 

இப்பொழுது பார் என்னால் உனக்கும் உன் ஹஸ்பெண்டிற்கும் பிரச்சனை வந்துருச்சு. சோ இனிமே இந்த ஊரில் நான் இருந்தா உங்க மேரேஜ் லைப் பாதிக்கும்னு தெரிந்ததால் நான் ஊரைவிட்டு போக முடிவெடுத்து கிளம்பிட்டு இருக்கேன். அது சரி பத்மினி என்ன இந்த நேரம் பெட்டியோட நீ தனியா வர்ற?” என்று அவளின் முன் நடித்தான்.

 

நானும் இனி இந்த காட்டுமிராண்டி கும்பலுக்குள் வாழவிருப்பம் இல்லாமல் கிளம்பி வந்துட்டேன் ராஜேஷ். நீங்க கோயம்புத்தூரா போறீங்க? என்னைய ரயில்வே ஸ்டேசனில் கொஞ்சம் இறக்கி விட்டுடுறீங்களா?”,

 

“என்கிட்ட போய் பெர்மிசன் கேட்குற பத்தூ, என்னைய ரயில்வே ஸ்டேசன் கூட்டிட்டுபோ ராஜேஷ்னு உரிமையா கேட்கணும் பத்தூ என்றபடி அவள் ஏற காரின் முன்பக்க கதவை திறந்துவிட்டான்.

 

சற்றுதள்ளி அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவனது நண்பர்களிடம் பத்மினி அறியாமல் ஒற்றை கையை தூக்கி காண்பித்துவிட்டு சுற்றி வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன் காரை ஓடவிட்டான்.

 

தீரன் அந்த ரூமிற்குள் வந்தபோது கூறிய வார்த்தைகள் யாழிசையின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்ததால் அவனின் அருகாமையை அவளால் வெறுக்கவே முடிந்தது.

 

ஆனால் அவனின் தழுவலில் இருந்து மீள இயலாமல் போனது அவளின் உடல்நிலையால். அவனின் உஷ்ண முத்தத்தாலும் அவனின் மேனித் தகிப்பாலும் அவளின் உடல் இயல்பிற்குத் திரும்பிக்கொண்டிருக்கும் போதே தீரனின் கைகளின் தேடலில் அவன் தன்னிலை இழக்க ஆரம்பித்ததையும் உணர்ந்தவள் காதில்

 

கமான்கமான் என் கூட பெட்டில் புரளத்தானே. காத்திருக்க யூ பிளட்டி பாஸ்டர்ட், நீங்கெல்லாம் லஸ்ட்க்கு அலையிறவங்கதானே?என்ற அவனின் வார்த்தைகள் எதிரொலித்தது.

 

சுரணை வந்த கை மற்றும் கால்களினால் தான் இப்பொழுது இழந்துவிட்ட பலத்திலும் கூட கடுமையாக அவனிடம் எதிர்ப்பு காண்பிக்க முயன்றாள்.

 

அவளின் ஒத்துழையாமையில் தன் மயக்கத்திலிருந்து வெளிவந்தவன், திரும்ப திரும்ப அவளிடம் தான் தவறாகவே நடந்துகொள்வதை உணர்ந்து, தனது அணைப்பில் இருந்தவளை பட்டென்று விட்டு விலக்கி எழுந்து கட்டிலைவிட்டு இறங்கினான்.

 

பின் அவளின் முகம் காணாமல் திரும்பி நின்றபடி “ஆர் யூ ஓகே நவ்” என்று கரகரத்த குரலில் கேட்டான்.

 

அவனுக்கு பதில் கூற விரும்பாத யாழிசை, தன் உடம்பில் இன்னும் தெம்பு திரும்பாத நிலையில் கலைந்திருந்த தன்னுடையை திருத்த நினைத்து வேகவேகமாக சரிபடுத்தவேண்டும் என்ற உந்துதலில் செயல்பட்டவளின் கரங்கள் இப்போது குளிரினால் அல்லாமல் இரவு முழுவதுவும் குளிரில் இருந்த பாதிப்பினால் உண்டான பலவீனத்தில் நடுங்கியது.

 

தான் பேசியதற்கு பதில் வராததால் திரும்பிப்பார்த்தவனுக்கு அவளின் நடுக்கம் கண்ணில் பட அவளுக்கு உதவும் எண்ணத்துடன் ஒரு எட்டு அவளை நோக்கி வைத்தான்.

 

தீரன் தன்னை நோக்கி ஒரு அடி வைத்ததை கண்டதும் கண்களில் பயத்துடன் அவள் பின்னால் தள்ளிச்சென்றாள். அவளின் கண்களில் தெரிந்த பயம் ஏனோ தீரனின் நெஞ்சை பலமாகத் தாக்கியது. எனவே கண் மூடி நின்று தனது மனதில் எழுந்த வலியை முழுங்கியவன், ”நோ நோ நான் வரல நீ ரிலாக்ஸ் ஆகிக்கோ” என்றவனுக்கு டென்சனில் சிகரட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

 

அதற்குமேல் அங்கு நிற்க விரும்பாமல் சிகரட்டை எடுத்து லைட்டரின் உதவியுடன் பற்றவைத்தவன். கபோர்டில் ஒரு டிசர்ட் எடுத்து போட்டுக்கொண்டு தன்னை சீர்படுத்திக்கொண்டு அவளை திரும்பி பார்க்காமல் அந்த அறையை விட்டு அவன் வெளியில் வந்தான்.

 

அந்த அறையை விட்டு அவன் வெளிச்சென்றதும் ஏனோ தெரியவில்லை யாழிசைக்கு கத்தி அழுகவேண்டும் என்ற உந்துதலில் வாய்விட்டு கதறி அழுதாள்.

 

தான் கடத்தப்பட்டது, தன்னை காணாமல் தன் அப்பா பாட்டியின் நிலை மற்றும் தீரனின் மேல் உள்ள கோபம் அவன் மேற்கொண்ட சி.என்.ஜிக்கு எதிரான செயலால் சற்று மட்டுப்பட்டு அவனின் மேல் இருந்த காதல் சற்று மேலெழுந்த நேரம் நேற்றைய இரவில் அவனின் பார்வையில் தான் எத்தனை கீழாக இறங்கியிருக்கிறோம் என்ற தவிப்பு அனைத்தும் சேர்ந்து அவள் மனதில் அழுத்தம் கூடி அவளை அழுகையில் தள்ளியது.

 

அறையை விட்டு வெளிவந்த தீரனுனை அடுக்கடுக்காய் வேலைகள் ஆக்ரமித்துக் கொண்டன. அதில் இன்று காலை வரவிருக்கும் வகுலாவை அழைத்து கொண்டுவந்து எங்கு தங்க வைக்க என்ற குழப்பம் எழுந்தது.

 

ஏனோ இப்பொழுது அவர்கள் இருக்கும் மகேஷ் மல்கோத்ராவின் மூலம் கிடைத்த தனது பாதுகாப்பு கோட்டையாக மாற்றிய இந்த இடத்திற்கு தங்களின் திட்டத்தில் சம்மந்தமில்லாத நபர்களை கூட்டிக்கொண்டுவர வேண்டாம் என்று நினைத்திருந்த வேளையில் வகுலாவை எங்கு தங்க வைக்க என்ற கேள்வி எழுந்தது.

 

கோயமுத்தூரில் யாழிசைக்காக அவன் வாங்கிய வீடு மட்டும்தான் இவர்களுக்கு இருக்கும் இன்னொரு பாதுகாப்பான இடம்.

 

எனவே அவளை அங்கு கூட்டிக்கொண்டு போய் வீட்டுச்சிறையில் வைக்க தீரன் ஏற்பாடு செய்தான்.

 

வகுலாவை ஏர்போர்ட்டில் பார்த்தபோது அவள் “ஹாய் தீரா என்று ஆர்வத்துடன் வந்தவள் அவளின் அம்மா கூறியிருந்த அவரின் அம்மாவழிச் சொந்தமான வெங்கடேசன் என்பவரையும் கண்கள் தேடியது. ஆனால் அந்த வெங்கடேஷ் என்பவன் பாதிவழியிலேயே ஒரு சிறு ஆக்சிட்டென்டில் மாட்டிக்கொண்டார்.

 

வெளிப்பார்வைக்கு அது சாதாரண சின்ன ஆக்சிடென்ட் ஆனால் உண்மையாகவே தீரனால் பிளான் செய்யப்பட்டு நடைபெற்ற விபத்து என்பதை மற்றவர்கள் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

 

அவளை ரிசீவ் பண்ண தீரன் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மேலும் பிராங் அவளை இந்தியா அனுப்பும் போது தீரனுக்கு எதிராக அவளை செயல் படும்படி கூறி அனுப்பிய செயலுக்கு, வகுலா தீரனை அணுகுவது அவ்வளவு எளிதல்ல என்றே நினைத்திருந்தனர் வகுலாவும் பிராங்கும். ஆனால் அதற்கு மாறாக அவனே தன்னை பிக்கப் பண்ண வந்திருப்பதாகவும் தன் அம்மா விசாலி போன் செய்து தகவல் அளித்ததாகவும் தீரன் சொன்னதில் மகழ்ச்சியடைந்தாள்.

 

தனது அம்மாவின் வார்த்தையைத் தட்டமுடியாமல் வந்திருப்பவனைக் கண்டு தனது செயலை எளிதாக முடித்துவிடலாம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டுக்  கொண்டாள்.

 

மேலும் அதற்கு அடித்தளம் போடும் நோக்குடன் “தாங்க் யூ தீரா” என்றபடி அவனை அணைக்க வந்த வகுலாவின் மேனி தன் மேல் படாதவாறு தள்ளிச்சென்று தனது கையை அவளுக்கு நீட்டி “வெல்கம் டூ இந்தியா” என்று கூறினான்.

 

தனது ஹக்கை ஏற்காத தீரனை வித்தியாசமாகப் பார்த்தபடி “என்னை கூட்டிட்டுப் போக வெங்கடேசன் அங்கிள் ஏர்போர்ட் வருவதாகத்தானே என்னிடம் சொன்னாங்க?” என்றவள், அவளின் போன் இங்கிருக்கும் சிம் கார்ட் போட்டால்தான் வொர்க் ஆகும் என்பதால் “கேன் ஐ யூஸ் யுவர் மொபைல் தீரன் நான் அங்கிள்கிட்ட ஒரு வார்த்தை பேசிவிடுகிறேன்” என்றாள்.

 

அப்போது சற்று திரும்பி அவனின் டீமில் உள்ள ஒருவன். யாரோ ஒருவனைப்போல் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தவனை நோக்கி தீரன் கைவிரலால் ஏதோ சைகை செய்த மறுநிமிடம் விரைந்து அவனிடம் வந்த அவனிடம் “கிவ் யுவர் போன் எ பியூ மினிட்ஸ் டு டாக் பார் வகுலா” என்றான்.

 

அவன் அவ்வாறு கூறியதும் “உங்க போனுக்கு என்ன ஆச்சு தீரன்” எனக்கேட்டபடி யோசனையுடன் தீரனின் ஆள் அவளிடம் கொடுக்கும் மொபைலை வாங்கினாள்.

 

“காரில் இருக்கு வகுலா” என்றான் தீரன். அவள் அந்த அங்கிள் வெங்கடேசனுக்கு தன் போனில் இருந்த மொபைல் நம்பரை பார்த்து டயல் செய்தாள்.

 

ஆனால் அப்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததாக தெரியவந்ததும் வேறு வழியில்லாமல் தீரனுடன் அவனின் காரில் ஏறினாள்.

 

வகுலா பிளைட்டில் இருந்து இறங்கியதிலிருந்து அவள் தீரனுடன் அவனின் காரில் ஏறும் வரை அந்த ஏர்போர்டில் இருந்த அமைச்சர் ரங்கராஜன் ஏற்பாடு செய்திருந்த ஆளின் மூலம் பிராங்கிற்கு லைவாக விஷயம் ஷேர் செய்யப் பட்டுக்கொண்டிருந்தது.

 

தீரன் ஏர்போர்டுக்கே ஒரு பிளான் போட்டு தன் டீமுடன் தான் வந்திருந்தான். அங்காங்கே ஏர்போர்ட்டில் பயணிகளை ரிசீவ் செய்யும் ஆட்களைப்போல் தீரனின் ஆட்கள் நின்றுகொண்டு வகுலாவையும் தீரனையும் யாராவது நோட்பண்ணிக் கொண்டிருக்கிறார்களா? என்றும் அவர்களை அணுக முயல்கிறார்களா? என்றும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

 

அதேபோல் கவனித்ததில் வகுலாவையும் தீரனையும் நோட் பண்ணிக் கொண்டு அவர்களுடன் வெளியில் வந்த அந்த மினிஸ்டரின் ஆள் தனது மொபைலில் அங்கு நடந்ததை அப்படியே ஒப்பித்தான்.

 

அவன் கூறியதை கேட்ட பிராங்கிற்கு “ஷி ஷூட் நாட் கோ வித் தேட் டீரன். ஹேய் மேன் நீ அவள் பேரை சத்தம்போட்டு கூப்பிட்டு அவளை அவன் காரில் ஏறாமல் தடுத்தி நிறுத்தி உன் மொபைலை அவளிடம் கொடு நான் பேசுறேன்” என்று கூறினான்.

 

பிராங் கூறியதும் கத்த முயன்ற மறுநிமிடம் அவனை நோக்கி வந்த தீரனின் ஆள் “ஹாய் பிரதாப்” என்று ஒருகையால் அவனின் தெரிந்தவன் போல் இழுத்து தன்னோடு அணைத்தவன்.தனது கையடக்கத் துப்பாக்கியை அவனின் வயிற்றில் வைத்து அழுத்தியபடி தாழ்ந்த குரலில் “டோன்ட் மூவ், சுவிட்ச் ஆப் யுவர் போன் அப்படி செய்யாட்ட உன் உயிர் உன் உடம்பில் தங்காது” என்று கூறினான்.

 

அவனின் செயலில் படபடப்பான அந்த மினிஸ்டரின் ஆள் மொபைலை அவன் கூறியதுபோல் சுவிட்ச்ஆப் செய்தான். தீரனின் காரில் வகுலா அமர்ந்த மறுநிமிடம் கார்வேகமெடுத்தது. ஏர்போட்டைவிட்டு தாண்டிய உடனே தீரனின் துப்பாக்கி வகுலாவின் நெற்றிபொட்டில் இருந்தது அவளின் லக்கேஜெல்லாம் அந்த காரில் டிக்கியில் ஏற்றப்பட்டிருந்தது.

 

“உன் ஹேண்ட்பேக்கில் நீ காதில் போட்டிருக்கிற தோடு முதல் கழுத்தில் கையில் போட்டிருகிற எல்லா ஆர்னமெண்ட்ஸையும் கழட்டிப்போடு, கொஞ்சதூரத்தில் கார் நின்றதும் உன் ஹேண்ட்பேக்கை இந்த காரில் விட்டுட்டு நீ மட்டும் என்னுடன் இந்த காரிலிருந்து இறங்கி வேறு காரில் என்னுடன் ஏறணும்” என்று அழுத்தமான குரலில் கூறினான் தீரன்.


 

அத்தியாயம்-28

ராஜேஷ் பத்மினியுடன் பேசிக்கொண்டே காரின் முன்கதவை அவளுக்கு திறந்து விடும் நேரம் அக்காரிலிருந்து பத்தடி தூரத்தில் வந்து நின்ற பஸ்ஸில் இருந்து வானவராயரின் ஊரில் இருக்கும் ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைக்கு வெளியூரில் இருந்த அவர்களின் குலதெய்வத்திற்கு மொட்டை எடுத்து காதுகுத்த சுற்றத்தாருடன் சென்ற ஒரு கோஸ்ட்டி வந்து இறங்கியது.

 

அவர்கள் அனைவரின் பார்வையிலும் ராஜேஷ் பத்மினிக்காக கார்கதவை திறந்து விடுவதையும் அவன் சுற்றிவந்து காரில் ஏறி காரை ஓட்டிச்சென்றதுவரை அத்தனையும் விழுந்தது.

 

எனவே ஊருக்குள் வந்ததும் அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்னதான் ஊர் பெரிய வீட்டு பெண்ணாக இருந்தாலும் இரவு நேரத்தில் இப்படி கல்யாணம் ஆன பொண்ணு அடுத்த ஆம்பளைகூட போறதை பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும்.

 

இந்த ஊருக்குன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாம போயிடுமே இதை பார்க்குற மத்தவங்களும் தப்பு பண்றது தவறில்லைன்னு நினைச்சிட்டா ஊர் என்னாவது? ஒழுக்கமில்லாதவங்களை ஊரில் சேர்க்காமல் தள்ளி வைப்பதுபோல பெரிய வீட்டு வானவராயர் பொஞ்சாதியையும் தள்ளி வைக்க நாளைக்கு ஊருக்குள் பிராது கொடுக்கணும் என்று பேசிக்கொண்டனர்.

 

இவ்விசயம் கண், மூக்கு, காது கொடுத்து அன்றிரவே பலவிதமாக ஊருக்குள் பரவி அது வானவராயரின் வீட்டிற்கும் வந்து சேர்ந்தது விடியலில்.

 

எப்பொழுதும் பத்மினி லேட்டாகவே எழுந்துக்கொள்வதால் காலையில் ஆறுமணிக்கு வீட்டுக்கு பால் கறக்க வரும் பால்பாண்டியின் மூலம் வானவராயரின் அம்மா காதில் இவ்விசயம் விழுந்தது.

 

வயலுக்கு நடவுக்கு எத்தனை ஆள் கூட்டிவர என்று கேட்டுவந்த முனியாண்டி மூலம் வானவரயரின் தந்தையின் காதிலும் விழுந்தது. தோட்டத்தில் பூஜைக்கு பூப்பறிக்கச்சென்ற வானவராயரின் அக்கா தேவகியின் காதிலும் விழுந்தது.

 

தேவகியின் மகளும் வானவரயரின் மனைவியுமாகிய பத்மினி பற்றி தவறானப் பேச்சு ஊருக்குள் போய்கொண்டிருப்பதாகவும் சில பெருசுகள் அவள் மீது நாளைக்கு பிராதுக் கொடுக்க பேசிக் கொண்டிருப்பதும் தோட்டத்தில் உரமூட்டை தூக்க வந்த பொன்னையா உடன் வந்த அவளின் வீட்டுக்காரி கூறினாள்.

 

அதனை கேட்ட தேவகிக்கு மகள் வீட்டிற்குள் தானே தூங்கிக் கொண்டிருகிறாள் இவங்க சொல்றதப் பார்த்தா அவ எங்கேயோ ஓடிப்போயிட்ட மாதிரியில்ல இருக்கு! என்று என்னும் போதே அடிவயிறு கலங்க வேகமாக பத்மினியை அவளின் அறையில் இருக்கிறாளா என்று தெரிந்துகொள்ள ஓடிச்சென்று அவளின் ரூம் கதவை தட்ட கைவைத்தால் அது உள்ளே லாக் போட்டாமல் திறந்திருந்தது.

 

உள்ளே சென்றவளின் கண்ணில் பட்டது அங்கிருந்த மேஜையின்மேல் பேப்பர் வெயிட்டரின் கீழ் இருந்த ஒரு தாள். பதட்டத்துடன் அதை எடுத்தவருக்கு அதில் இருந்த ஆங்கிலவாசகம் என்ன என்று தெரியவில்லை.

 

எனவே வேகமாகச் சென்று அவளின் பீரோவைத் திறந்து பார்த்தாள். அதிலிருந்த அவளின் உடுப்புக்கள் அடுக்கிவைக்கப் பட்டிருந்த இடம் காலியாக இருந்தது. இருந்தும் பாத்ரூமிற்குள் இருந்தாலும் இருக்கலாம் என்று சென்று பார்த்தவள் அங்கேயும் அவள் இல்லை.

 

தேவகிக்கு படபடவென வந்தது. பட்டணத்து வாசம் மகளின் வாழ்வை தடம் பிரட்டிவிடுமோ என்று அஞ்சி இங்கு வந்து ஊரே மெச்சும் வகையில் வாழ்ந்துவரும் தன் தாய்வீட்டில் கம்பீரமே உருவாக வளம் வரும் தன் தம்பிக்கு கல்யாணம் செய்துக்கொடுத்து வாழ வைத்துவிட்டேன் என் மகளை என்று இறுமாப்புடன் இருந்தேனே.

 

கிடைத்த அற்புதமான வாழ்கையை முட்டாளாக இழந்த அவரின் மகளுக்காக அழுவதா? இல்லை தான் சொன்ன காரணத்துக்காக மறுவார்த்தை ஏதும் கூறாமல் அவளுக்கு என்னை கல்யாணம் செய்வதில் சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று பேசி அவளின் சம்மதம் பெற்று மணந்தவன் மனைவி இன்று பொய்த்துப் போனதால் கிடைத்த ஏமாற்றத்தால் அவமானப்பட்டு நிற்கும் தன் தம்பிக்காக வருத்தப்படுவதா?

 

ஆயிரம் கனவுகளோடு என்னை வளர்த்த தாய்தந்தையை தவிக்கவிட்டு காதலித்தவரையே கணவனாக அடையவேண்டும் என்பதற்காக இருபத்தியோரு வருஷத்துக்கு முன் என்னைப் பெற்றவர்களை தலை குனியச்செய்தேன்.

 

அதை மன்னித்து ஏற்றுக்கொண்ட தன் தாய் வீட்டின் நிலையும் தனது தம்பியின் நிலையும் தனது மகளால் மீண்டும் தலை குனியும் நிலை வந்ததை கண்டவளுக்கு, எப்படி இதை சரிசெய்வேன் என்ற சஞ்சலமும் வருத்தமும் இயலாமையாகத் தாக்கியது.

 

அந்நேரம் வெளியே அவளின் தாயின் குரல் அவளைத் திடுக்கிட வைத்தது. “ஏ.. ராசா என்னாச்சு உங்களுக்கு?” என்ற குரல் அவளுக்கு கேட்டதும் பதறியபடி வெளியில் வந்தாள் தேவகி.

 

வானவரயரின் அப்பா திருவேங்கடம் தன்னிடம் முனியாண்டி கூறிய செய்தியை எப்படி தன் மனைவிடம் கூற என்ற பதை பதைப்புடன் இருந்தார். அவரது மனைவிக்கு அவ்விசயம் அரசல் புரசலாக காதில் விழுந்ததை அவர் அறியவில்லை.

 

அந்நேரம் இரவு வீட்டில் தங்காமல் பண்ணைக்குச் சென்ற தன் மகன் இன்னும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் கம்பீரமான தனது மகன் காதில் இவ்விசயம் விழுந்தால் அவன் எவ்வாறு துடிப்பான் என்று நினைத்தவருக்கு நெஞ்சில் முணுக்கென்று முளைத்த வலி அதிவிரைவில் அதிகரித்து வியர்வையில் குளித்தபடி தன் நெஞ்சை பிடித்தபடி தனது சாய்வு நாற்காலியில் உட்கார முயன்றவர் உட்காராமல் தடாரென விழுந்தார். அவரின் உயிரும் அதேநிமிடம் பிரிந்தது.

 

பண்ணை வீட்டிற்கு சேதி பறந்தது. விரைந்தோடி வந்த வானவராயர் கண் முன்னே சடலமாகி இருந்த தந்தையின் இறுதிக் காரியத்தை செய்தவருக்கு தனக்கு மனைவியாக வந்தவளால் ஏற்பட்ட இழப்பை கண்டவருக்கு நெஞ்செல்லாம் ரணமாகிப் போனது.

 

அன்றிலிருந்து அன்னம் தண்ணி கூட அருந்தாமல் வெறித்தபடி அமர்ந்திருந்த தனது தாயையும் தன் மகள் இறந்துவிட்டால் என்று கூறி தனது தாய்க்கும் தனக்கும் சேவகியாக மாறிப்போன அக்காவையும் கண்டவர் துக்க வீட்டின் சூழல் காரணமாகவும் பின்நடந்த தனது தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரி வீடு என்று அழைந்தவருக்கு மனதின் ஓரத்தில் முள்ளாய் குத்திகொண்டிருந்த தன் மனைவியின் நினைவை வெளிப்படுத்தவும் அவளைத் தேடிப்போகவும் சந்தர்ப்பம் ஏற்படாமல் போனது.

 

அவரின் தகப்பனின் பதினாறாம் நாள் காரியத்தின் போதுவரை அந்த வீட்டின் அருகில் வானவராயரின் வீட்டின் தயவில் பாட்டியும் பேத்தியுமாக வாழ்ந்து வந்த வெள்ளையம்மா தான் அந்த வீட்டின் பொறுப்பை வேலைக்காரி என்ற இடத்தில் இருந்து செய்யாமல் வீட்டின் ஒரு ஆளாக இருந்து சீர்படுத்த முயன்றாள்.

 

நேரா நேரத்திற்கு சமையல் செய்து வானவராயரை சின்னய்யா சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் சாப்பிட்டுப் போங்க அப்போத்தான் ஜமீந்தாரம்மாவை என்னால் சாப்பிடவைக்க முடியும் என்றும், ராசாத்தியையும் தேவகியையும் இப்படி இருந்தீங்கன்னா எப்படி சின்னய்யாவை தேத்தி கொண்டுவருவீங்க என்று மிரட்டி சாப்பிட வைப்பதும். கணக்கு கணேச பிள்ளையிடம் வீட்டுக்கு வரும் நெல் மூட்டை கணக்கும் கூலிக்கு வந்த ஆட்கள் கணக்கும் கூறி கணக்குச்சொல்வதும், பின் வானவராயரிடம் அன்றைய வரவு செலவுகளை ஒப்பித்து இரவு படுக்க மட்டுமே வீட்டுக்கு போகும் அவரின் குணம், பொறுமை அந்த குடும்பத்தின் மீதிருக்கும் அக்கறை ஆகியவற்றை பார்த்தாள் தேவகி.

 

உடலுக்கு முடியாமல் இருக்கும் தனது அம்மாவிடம் என் மகச் செத்து போய்விட்டாள் அதுக்காக என் தம்பியை இப்படியே விட்டுவிட முடியுமா?” என்றார். மனதிற்குள் தனது மகளை பற்றிய கவலை இருந்தாலும் தன் தாய்வீட்டின் இந்த நிலைக்கு காரணமான தன் மகளின் மீது அதை விட கோபம் அதிகமாக இருந்ததால் அவ்வாறு கூறினாள்.

 

அதுவரை தனது மகளின் முகம் பார்த்து பேசாமல் இருந்த ராசாத்தி அவள் அவ்வாறு சொன்னதும் நிமிர்ந்து மகளின் முகம் பார்த்தார்.

 

இத்தனை நாள் பாராமுகத்துடன் தன்னுடைய மகள் மீது இருந்த கோபத்தில் தன்னை ஏறெடுத்துக்கூட பார்க்காமல் இருந்த தன் அம்மா வானவரயரின் வாழ்க்கை பற்றி பேசவும் நிமிர்ந்து பார்ப்பதை கண்டவர் கடகடவென தன் மனதில் உள்ளதைச் சொன்னார்.

 

“ஆமாம்மா என் மகள் செத்துப்போயிட்டா அதனால இந்த வீட்டு மனுசமக்க மேல அன்பா பாசமா பொறுப்பா உள்ள வெள்ளையம்மாவை அப்பாவின் பதினாறாம் நாள் விசேசத்தப்பவே உங்க உடல்நிலையை காரணமாக வச்சு என் தம்பிக்கு கல்யாணம் முடிச்சுடணும்.

 

அப்படியில்லையினா இனி அவனை வேறு கல்யாணம் செய்யவைப்பதே முடியாத காரியமாகிடும் இனி என் வயித்தில பிறந்த பாவி எக்காரணம் கொண்டும் இந்த வீட்டு வாசல்படி மிதிக்க நான் விடமாட்டேன். இனி இந்த குடும்பத்தில் வாழும் தகுதியை அவ இழந்துவிட்டாள் என்று கூறினார் தேவகி.

 

ராசாத்திக்கும் அதே எண்ணம் மனதில் இருந்ததால் இதை நீ செஞ்சு முடி அப்போதான் நீ என் மகள்னு இனி நான் உரிமையா உன் கூட பேசுவேன் என்று பதில் கூறிவிட்டு அமைதியானார்.

 

அவரின் வார்த்தைகளை கேட்ட தேவகிக்கு தன் அம்மாவின் அன்பையும் மன்னிப்பையும் தனது தம்பியின் சந்தோசத்தையும் மீட்டெடுக்க இது ஒன்றே முடிவு என்று நினைத்து வெள்ளையம்மாளுக்குக் கூட தெரியாமல் அவர் பாட்டியிடம் தனியாக பேசி சம்மதம் வாங்கினாள் தேவகி.

 

பதினாறாம் நாள் காரியத்திற்கு வந்தவர்கள் முன்னிலையில் தன் மனதில் இருப்பதை கூறி தனது தம்பியை வெள்ளையம்மாவின் கழுத்தில் தாலி கட்டச்சொல்லி வற்புறுத்தினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த வானவராயரிடம், தற்கொலை மிரட்டல்விட்டு தான் நினைத்ததை சாதித்தார் தேவகி.

 

அதன் பின் வெள்ளையம்மாளும் வானவராயரும் ஊருக்கு முன்பு மட்டுமே பல வருடங்கள் கணவன் மனைவியாக இருந்தாலும் இருவரும் இணையாமலேயே இருந்தனர்.

 

நான்கு வருடம் சென்ற பின்பே வானவராயர் வெள்ளையம்மாளின் தன்னலமில்லா அன்பால் ஈர்க்கப்பட்டு இரண்டாவது முறை இரண்டாம் தாரமான வெள்ளையம்மாளின் மேல் காதலில் விழுந்து அவருடன் கணவனாக இணைந்தார்.

 

ராஜேஷுடன் ரயில்வே ஸ்டேசன் சென்ற பத்மினியை டெல்லி ரயில் ஏறவிடாமல் தடுக்க முயன்றான். தன்னுடன் வரச்சொல்லி தான் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறினான். ஆனால் பத்மினியோ தனக்கு யார் தயவும் தேவையில்லை தன்னுடைய சொந்த உழைப்பால் தன்னால் தனியாக வாழமுடியும் என்று கூறி டெல்லியில் வந்து தனது பரதநாட்டிய குழுவில் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

 

அவர் ஏதோ ஒரு கோபத்தில் வந்து விட்டாராகினும் ஒவ்வொரு நாளும் வானவராயரை பார்க்கவேண்டும் என்ற ஆவலும் அவருக்கு எழாமலில்லை. தான் அவர் அடித்த அடிக்கு கோபித்துக்கொண்டு வந்துவிட்டேன் என்பதற்காக தன்னை தேடி வராமல் அவர் இருப்பதை கண்டு தன் மேல் அவருக்கு காதல் துளி கூட இல்லையோ என்ற சஞ்சலம் கொண்டார்.

 

நாள் செல்லச்செல்ல பத்மினிக்கு தேவையான வருமானமும் நண்பர்களுக்குள்ளான சந்தோஷங்களும் குறைவில்லாமல் இருந்தாலும் மனதின் ஓரம் தன்னைத் தேடி வானவராயர் வராததினால் உண்டான ஏமாற்றம் எந்நேரமும் வதைத்துக்கொண்டே இருந்தது.

 

நாற்பது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தான் கற்பமாக உள்ளதையே பத்மினி உணர்ந்தாள். அதை உணர்ந்தபின் அவளால் வானவராயரிடம் மேல் கோபத்தை பிடித்து வைத்துக்கொள்ள முடியாத அளவில் சந்தோசமும் உண்டானது. கூடவே தான் செய்ததை திரும்ப நினைத்து பார்க்கையில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தன் மேல் கோபம் கொள்ளுமாறு சூழ்நிலையை வானவராயருக்கு ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தாள்.

 

இப்பொழுது நினைக்கும் போது தன்மேல் நிறைய தவறாகக் கணிக்கக் கூடிய சூழலும், வானவராயர் இடத்தில் வேறு ஒருவன் இருந்தால் இன்னும் மோசமாக தன்மேல் பழி சுமத்தும் சூழல் இருப்பதும் அவளுக்கு தெளிவானது.

 

எனவே இனியும் அவர் தன்னை தேடிவருவார் என்ற நம்பிக்கையில் இருக்க கூடாது என ஊருக்கு கிளம்பி தன் வயிற்றில் அவரின் வாரிசு வளர்வதை சொல்லணும் எனக் கிளம்பிகொண்டிருக்கும் போது பத்மினியைத் தேடி ராஜேஷ் அங்கேயே வந்தான்.

 

ஏனோ பத்மினிக்கு தான் இப்பொழுது இருக்கும் மனநிலையில் ராஜேஷை சந்திக்கும் விருப்பம் இல்லை. ஏனோ ஒரு வகையில் நண்பனான அவன் எனக்காக என் சந்தோசத்துக்காக சினிமா கூட்டிக்கொண்டு போனதால் தான் தனக்கும் வானவவராயருக்கும் இந்த பிரிவு உண்டானது. இருந்தாலும் தற்போதைய தன் நிலைக்கு அவனும் ஒரு காரணம் என்பதால் அவனின் வரவு அவளுக்கு பிடித்தமானதாக இல்லை. ஆனால் ராஜேஷ் முன் எப்பவும் விட மிகவும் ஆர்வமாக பந்தாவாக அவளுக்கு நிறைய பரிசுப்பொருட்களை வாங்கிகொண்டு அவளை தேடிவந்திருந்தான்.

 

எப்பொழுதும் பத்மினி அல்லது பத்தூ என்று அழைப்பவன் வந்ததும் ஹாய் சுவீட்டி என்று விரிந்த சிரிப்புடன் தனது கையில் வைத்திருந்த பூங்கொத்தை அவளிடம் கொடுத்தான். அதன் பின் அவள் அழகு இப்பொழுது இன்னும் கூடியிருப்பதாகவும் தங்களுக்கிடையில் இனி எந்த தடையும் இல்லையென்றும் கண்டபடி பிதற்றினான்.

 

உங்களுக்கு என்னாச்சு ராஜேஷ் நான் உங்களோட ஃப்ரெண்ட், ஜஸ்ட் ஃப்ரெண்ட் ஒன்லி. ஆனா புதுசா இருக்கு உங்க பேச்சு, நான் என்னமோ உங்க லவ்வர் மாதிரி பேசிட்டு இருக்கீங்க. இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கல. நான் மிஸ்ஸஸ் வானவராயர்னு உங்களுக்கு ஞாபாகம் இல்லையா? அப்படி இல்லாவிட்டால் அதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் கேட்டுக்கோங்க, இனி இது போல் வானவராயரின் வொய்ப் கூட நீங்க பேசுறதா இருந்தா உங்க ஃப்ரெணட்ஷிப்பே இனி வேண்டாம்”.

 

அவளின் இந்த நிமிர்வானப் பேச்சு அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பி அவனின் உண்மையான முகத்தை அவளிடம் வெளிகாண்பிக்கச் செய்தது. மேலும் அவளின் இப்பொழுதைய அநாதரவான நிலை அவனுக்கு அவள் எளிதானவளாக எண்ணவைத்தது. எனவே கடகடவெனச் சிரித்தவன், “அது பாஸ்ட் பத்தூ. இப்போ நீ என்னோட ஓடிவந்த என் காதலி! அதனால உன் எக்ஸ் ஹஸ்பென்ட் வானவராயருக்கு உன் அம்மாவே இன்னொரு கல்யாணம் முடிச்சு வச்சுட்டாங்க. என் புருசன்னு இப்போ நீ வானவராயனைத் தேடிப்போன ஊரே சேர்ந்து உன் மேல சானிய கரைச்சு ஊத்தும், கட்டுன புருசனையும் நழுவ விட்டுட்ட இப்போ உன்னை வச்சுக்க போற என்னையும் விரட்டிடாத.

 

உன் அழகுக்கு உன்னை கல்யாணம் செய்யணும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் அந்த வானவராயனுக்கு பொண்டாடியா போயி அவன் எச்சி பட்டத்தால உன்னைய இப்போ வச்சுக்கிடணும்னு நினைக்கிறேன்”.

 

என்று அவன் கூறி முடிக்கையில் அங்கு மூலையில் இருந்த துடப்பத்தை கையில் எடுத்தவள் அவனை கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தாள். அவளின் இந்த அதிரடியில் அரண்ட ராஜேஷ் சத்தம் கேட்டு அங்கு அவளுக்கு தெரிந்தவர்கள் கூட ஆரம்பித்ததும் மாட்டினால் அதோகதி ஆகிடும் என்று தப்பித்து ஓடிவிட்டான்.

 

அவன் சென்றதும் தான் ஊருக்கு போக பேக் செய்த துணி இருந்த பையை திருப்பி கவிழ்த்தி கொட்டியவள் தனிமையில் ரூம் கதவை சாத்திவிட்டு கதறி அழுதாள்.

 

அவளால் வானவராயர் வேறு ஒருத்தியை கல்யாணம் செய்துக்கொண்டார் என்று கூறியதை நம்பவே இயலவில்லை. என்றாலும் அது உண்மை என்றால் தன்னால் அதை நேரில் சென்று பார்த்து உறுதிசெய்ய நினைக்கவே மனம் பயத்தில் கிடுகிடுத்தது. எனவே அவள் வீட்டில் இருந்த டெலிபோனுக்கு ட்ரங்க்கால் புக் செய்து பேச முடிவெடுத்தாள்.

 

இணைப்பு கிடைத்த போது வானவராயர் வெளியில் போயிருந்தார். வெள்ளையம்மாள் சமையல் செய்துக்கொண்டிருந்தால் ராசாத்தி உடல் நிலை இன்னும் சீராகாததால் படுக்கை அறையில் இருந்தார். எனவே தேவகி தான் கூடத்தில் இருந்த டெலிபோன் அழைப்பை ஏற்று பேசினார்.

 

எதிர்பக்கம் “ஹலோ நான் பத்மினி பேசுறேன்” என்றதுமே அவரின் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. மகளுக்காக கண்ணீர் அருவியாக கன்னத்தில் வழிய வழிய துடைத்துக்கொண்டே குரலில் தனது நெகிழ்ச்சியை காண்பிக்காமல் பேசினார்.

 

“அந்த பேரில் ஒருத்தி முன்னாடி இந்த வீட்டில் இருந்தாள் ஆனால் அவ இப்போ உயிரோட இல்லை. என் உறவுன்னு சொல்லிக்கொண்டு இந்த ஊருபக்கம் வந்தே உன்னை ஊர்வாசலிலே நிறுத்தி உள்ளவரவிடாம செத்து போன உன்னை திரும்ப சாகடிச்சிட்டு நானும் செத்துப்போயிடுவேன்.

 

என் தம்பிக்கு உன்ன மாதிரி பேய கட்டிவச்ச நானே அவனுக்கு இப்போ அந்த பூமாதேவி போல அன்பான பொண்ண கட்டிவச்சுருக்கேன். உறவுன்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள் வந்துறாத உன்னால என் அப்பா மட்டும் செத்தது போதும். திரும்பி வந்து எங்க எல்லோரையும் சாகடிச்சுடாத” என்று படபடவென பேசியவள் அவளின் பதிலைகூட கேட்காமல் ரிசீவரை தாங்கியில் வைத்துவிட்டாள்.

 

ஏற்கனவே ராஜேஷ் சொன்னது தான் இருந்தபோதிலும் தனது தாயாரின் வாய்மொழியாக கேட்டது பத்மினிக்கு அத்தனை வலியைத் தந்தது.

 

நடைபிணமாக இருந்தவளுக்கு அமெரிக்காவில் திருமணமாகி கணவருடன் சென்ற அவளது தோழி விசாலி அங்கு ஆரம்பித்திருந்த நடனப்பள்ளிக்கு ஆசிரியர் தேவைபட்டதாக கூறவும் இங்கு இனி இருக்க முடியாது என்று முடிவெடுத்து தானே அந்த வேலையில் சேர விரும்புவதாக கூறி அவளது நடனப்பள்ளியின் உதவியோடு நடன ஆசிரியர் பணிக்காக அமெரிக்கா புறப்பட்டுவிட்டாள் பத்மினி.

 

குலா தீரனின் இந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை. அவனை சாதாரண ஒரு பிஸ்னஸ் மேனாகவும் பிராங்கின் பிஸ்னஸ் அட்வைசர் என்ற முறையிலும் தான் தெரிந்து வைத்திருந்தாள்.

 

அவன் இந்தியாவில் பிராங்கிற்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டிருகிறான் என்று பிராங்கின் மூலம் அறிந்திருந்தால் தான் என்றாலும் வெப்பன்ஸ் கொண்டு மிரட்டுபவனாக அவள் அவனை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

 

பிராங்கும் அவளிடம் அவனின் இந்த தன்மையை கூறவில்லை. தன்னுடைய அக்கெளண்டில் ஒரு லம்ப் அமௌன்ட் தீரனுக்காக அவனின் நண்பன் இமாமி ஹேக் செய்து இந்தியாவில் அவன் செட்டில் ஆகிவிட வழிசெய்துவிட்டான். மேலும் அந்த அமௌன்ட் லூடெட் ஆனது பற்றி வெளியில் கூறமுடியாது ஏனெனில் அப்பணம் கவெர்மென்டுக்கு தெரியாமல் நான் வைத்திருப்பது ‘சோ’ எப்படி அவன் டிரிக்கியா என்னிடம் கொள்ளையடித்தானோ அதேபோல் நானும் அவனிடம் என்னிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை அவ்வாறே மீட்டெடுக்கணும்.

 

அந்த அமௌன்ட் உனக்காக நான் சேர்த்து வைத்தது என்று கூறி அது நம் கைக்கு வந்தால்தான் நம்மால் மேரேஜ் லைப்பை லக்சூரியசாக வாழமுடியும். சோ அந்த பணம் திரும்ப நம்ம கைக்கு வர நீ எனக்கு சின்ன ஹெல்ப் பண்ணு என்றவன் அவளுக்கு போட்டுக்கொள்ள விதவிதமான ஆர்னமன்ட்ஸ் அடங்கிய ஒரு பாக்ஸ் கொடுத்தான்.

 

அவன் கொடுத்த நகைகளை யோசனையுடன் வாங்கிய வகுலாவிடம் நீ எனக்காக செய்ய வேண்டியது ஒன்னே ஒண்ணுதான். எனக்காக நீ இந்தியா போகணும். அங்க நீ போகுறதுக்கும் சுத்திப்பார்க்கறதுக்கு எல்லா ஏற்பாடும் நான் பார்த்துகொள்வேன். அதற்குபதிலாக நீ அங்கிருக்கும் தீரனிடம் எனக்கும் உனக்கும் பிரச்சனை வந்து பிரிஞ்சுட்டதாக பொய் சொல்லணும்.

 

அதற்குப்பின் நேரே அவனிடம் பழையபடி நீங்க ரெண்டுபேரும் சேர ஆசைபடுவதாக சொல்லி ஏமாற்றி அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு போய் அவன் கூட எத்தனை பேர் இருக்காங்க என்பதையும் உன்னால் முடிந்தால் அவன் இப்போ நான் அவனைச் செய்ய அனுப்பிய சி.என்.ஜி வொர்க்கை தான் செய்கிறானா? என்றும் அல்லது வேறு ஏதாவது சி.என்.ஜிக்கு எதிரா செய்றானா என்பதை கண்டுபிடிக்க முயலணும்.

 

அவ்வாறு நீ கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. நீ அவன் கூட அவன் இருக்கிற இடத்துக்கு போகும்போது நான் கொடுத்த இந்த நகைகளை போட்டுட்டு போனாலே போதும். நீ எங்க இருக்குற என்னபேசுற என்பதையும் இதோபார் என்று அதில் இருந்த மாடலான ஒரு வாட்ச்சை எடுத்து அதில் மறைமுகமாக பொருத்தபட்டிருந்த ஹிட்டன் கேமராவை காண்பித்து,

 

இதை நீ போட்டுட்டுப் போவதால் அவன் இருக்கிற இடத்தின் சூழலையும் என்னால் இதன் மூலம் பார்த்து தெரிந்துக்கொள்ளமுடியும். எனக்கு அந்த டீடெய்ல்ஸ் போதும், அடுத்து அவனோட ஆட்டத்தை நான் குளோஸ் பண்ணிடுவேன்.

 

இதெல்லாம் நீ எனக்காக செய்தாய் என்றால் இங்கு நீ வரும் போது உனக்கும் எனக்குமான மேரேஜ்குரிய எல்லா ஏற்பாட்டையும் செய்து முடித்திருப்பேன். அன்னைக்கே நம்ம மேரேஜ் கிப்டாக என்னோட சதர்ன் ஈஸ்ட் ரெசாட்டை உன் பேருக்கு ரெஜிஸ்டர் செய்து கொடுத்துடுவேன் என்று டீல் பேசினான்.

 

அவன் தன் பேருக்கு ரிஜிஸ்டர் செய்து கொடுப்பதாகக் கூறிய அந்த ரெசார்டில் தங்குவதையே பெரிய பாக்கியமாக நினைக்கும் அவளிடம் அவளுக்கே உரியதாக ஆகிவிடும் என்று அவன் சொன்னதும் எப்பாடுபட்டாவது டீலை முடிக்கவேண்டும் என்ற ஆசை அவளுக்கு பொங்கியது அதன் விளைவை இப்பொழுது அவள் அனுபவிக்க ஆரம்பித்தாள்.

 

அமெரிக்காவில் தீரனின் ஆள் பிராங்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஷேர் செய்து தீரனுக்குச் சொல்லும் போதே பிராங் வாங்கிய ஸ்பை ஆர்னமென்ட்ஸ் கலெக்சன்ஸ் பற்றிய விவரத்தையும் அதை வகுலாவிடம் கொடுத்ததையும் ஏற்கனவே தீரன் தெரிந்து வைத்திருந்தான்.

 

தீரன் கூறியபடி அடுத்து சிறிதுநேரத்தில் வகுலாவை ஒரு கார் நின்றுக்கொண்டிருந்த இடத்தில் காரை நிறுத்தி அவளுடன் அதிலிருந்து இறங்கினான்.

 

 அதேபோல் நின்றுக்கொண்டிருந்த காரில் கிட்டத்தட்ட வகுலாவின் முகச்சாடையில் அவளின் வயதும் உயரமும் நிறமும் உள்ள அவளைப் போலவே மேக்கப் மற்றும் டிரஸ்சில் மற்றொரு பெண் அந்த காரில் இருந்து இறங்கினாள்.

 

வகுலா அவளை திடுக்கிடலுடன் பார்த்துக்கொண்டே தீரனின் துப்பாக்கி முனையில் அந்த காரில் ஏறினாள். அவளோ வகுலாவை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல், வகுலாவும் தீரனும் இறங்கிய காரில் ஏறி அமர்ந்தவள் சீட்டில் இருந்த வகுலாவின் ஹேண்ட்பேக்கை தன்னுடையது போல் எடுத்து தனது கையில் கோர்த்து வைத்துக்கொண்டாள்.

 

இரண்டு கார்களும் வேறு வேறு திசையில் அதன் பயணத்தை மேற்கொண்டது.


---தொடரும்---

 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib