அத்தியாயம் 16
அவர் கிளம்பியதும், “மேடம், டாக்டர் உங்களுக்கு ஹெல்த் இஸ்யூஸ் இருக்குதுன்னு சொல்றார்.... அதனால, நீங்க கிளம்புங்க மேடம்.... கொஞ்ச நேரத்தில் என்னோட பிரண்ட்ஸும், கதிரின் வீட்டில் உள்ளவங்களும் வந்துருவாங்க, நான் சமாளிச்சிருவேன்.” எனச் சொன்னதும்,
“ம்... கிளம்புறேன் விழியன். ஆனா... அதுக்கு முன்னாடி இங்க எல்லாம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு கிளம்புறேன். எனக்கும் ஆக்சிடென்டாகி இதே போல ஐ.சி.யூ வார்டில் நானும் அட்மிட்டாகி இருந்திருக்கிகேன்.... அந்தப் பாதிப்பு என் லைஃபையே புரட்டி போட்டுருச்சு. என்னோட நிலையில் இப்போ கதிர் இருக்கார்...
இந்த நேரம் உங்க ஃப்ரெண்ட்டோட மனசுக்கும் நிறையச் சப்போர்ட் வேணும். அப்போதான் இதில் இருந்து அவரால சீக்கிரம் மீள முடியும். அக்ஷிடெண்டுக்கு முன்னாடி போல டிரீட்மென்ட் முடிஞ்சு எழுந்தாலும் அவங்க லைஃப்பை நல்லபடியா கொண்டு போக முடியும்ன்ற நம்பிக்கைய சுத்தி இருக்கிற நாமதான் கொடுக்கணும்.
ஆபரேஷன் தியேட்டரில் இருந்து கதிரை எமெர்ஜென்சி வார்டுக்கு மாத்தினப்பிறகு... நான் பார்த்து பேசிட்டு கிளம்புறேன.” என்றாள்.
செவ்விழியன் விசாரித்தவரை ‘எமெர்ஜென்சி வார்டுக்குள்ள சிகிச்சை தருற டாக்டர் மட்டும்தான் போக முடியும். மத்தவங்க கண்ணாடி டோர் வழியாகப் பார்த்துக்கலாம்....
கதிர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டான். இப்போ தலையில் அடிபட்ட இடத்திலயும், கால் பிராக்சருக்கு ஆப்பரேசனும் நல்லபடியா முடிஞ்சு டாக்டர்ஸோட நேரடி பார்வையில் இருக்கான்.
இனிமே கண்விழித்து உணர்வுகள் திரும்பும் வரை எமெர்ஜென்சி வார்டில் தான் இருப்பான். இரண்டு நாளில் நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க. அந்த நேரத்தில கூடவே ஒருத்தர் இருக்கலாம். விசிட்டர்சும் அனுமதிப்போமெனச் சொல்லியாச்சு...
அங்குள்ள சூழலை கவனித்துப் பார்த்த கிரஹா, “விழியன் இந்தப் பகுதியில இருக்குற ஆபரேஷன் தியேட்டர், ஐ.சி.யூ, எமெர்ஜென்சி வார்டு எல்லாம் நல்லா பாதுகாப்பா சுகாதாரமா இருக்கு.... ஆனா, இதைத்தாண்டி பொது வார்டும் அதைச் சுற்றி இருக்கும் இடங்களும் சுகாதாரமே இல்லாம இருக்கு....
டாக்டர் சொல்வதுபோல உயிர் காக்கும் நடவடிக்கை மட்டும் நல்லபடி செய்து முடிச்சு கொடுத்துடுறாங்க..... அதுக்குப் பிறகு பேஷன்டுக்கான படுக்கை, சாப்பாடு, கழிப்பிட வசதி இதெல்லாம் நல்லபடி செய்றது போல ஹாஸ்பிடல் நிர்வாகம் இல்லதானே..!?
அரசு மருத்துவனையின் கட்டமைப்புச் சிறப்பாத்தான் இருக்கு... நிர்வாகத்த செயல்படுத்துறவங்களோட மெத்தனப் போக்கை மட்டும் சரி செய்தால் போதும். ஹாஸ்பிடல் பக்காவா ஆகிடும்.
பிரைவேட் ஹாஸ்பிடல் நிர்வாகம் பக்காவாக இருக்கும்.... ஆனா... உள்கட்டமைப்புப் பணத்தினை வைத்தே நிர்ணயிக்கப்படுது.
தனியார் மருத்துவமனையில் உயிர்களின் மதிப்பு நோயாளிகள் கொடுக்கும் பணத்துக்கு முக்கியத்துவம் தந்தே மருத்துவமும் கவனிப்பும் தராங்க....
நோயாளிகளுக்கான முக்கிய உயிர்காக்கும் கட்டமைப்பு பணத்தின் மூலமே அங்கு நிர்ணயிக்கப் படுது.... இதெல்லாம் மருத்துவம் பணமயமாகியதை குறிக்கிறதுல்ல. இது பெரிய சாபக்கேடு விழியன்.
மக்கள் கிட்ட நாம எலெக்சன் பிரச்சாரத்தில முன் வைக்கிற முக்கியக் கோரிக்கையா அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் முனைப்பு காமிப்போம்ன்னு சொல்லணும்.
அனைத்து மக்களுக்கும் இலவசமான மருத்துவம் அதுவும் சுகாதாரமான முறையில் கிடைக்க வழி செய்வோம்ற கருத்தை எடுத்து வைக்கணும். இதைச் சரி செய்ய என்ன செய்ய முடியும்ற வழிமுறைகளைத் தேடிப் போகணும விழியன்.” என்றாள்.
“நீங்க சொல்றது ரொம்பச் சரி மேடம். இன்னைக்குத் தேதியிலிருந்து அஞ்சு நாளைக்குப் பிறகிருந்து தானே எலெக்சன் மனுத்தாக்கல் செய்ய ஆரம்பிக்க அனுமதிப்பாங்க. நாம எட்டாம் தேதி எலெக்சன் மனு தாக்கல் செய்யலாம்னு நினைக்கிறேன் மேடம்.” என்றவனிடம்,
“குட் விழியன். இந்தச் சூழலில் நீங்க பின் வாங்கிடுவீங்கன்னு நினைச்சேன்.... ஆனா, நீங்க அப்படி இல்லைன்னு சொல்லாம சொல்லிட்டீங்க. நான் அதுக்குரிய ஏற்பாட்டை எல்லாம் பார்த்துக்குறேன். நீங்க இங்க கவனிச்சுக்கோங்க. நாளைக்கு நைட்டு நம்ம கட்சி முக்கியச் செயல்பாடுகள் பத்தி பேசி முடிவெடுக்கணும்.
உங்களுக்கும் அடிபட்டிருக்கு. நீங்க உங்க பிரண்டை காப்பாத்தணுங்கற எண்ணத்தில உங்களுக்குப் பட்ட அடியை பெருசா எடுத்துக்காம அலைஞ்சுக்கிட்டு இருக்கீங்க. உங்க காயத்தையும் கவனிங்க.... இந்தக் காயத்தோட என்னைப் பார்த்து பேச நேரில வர வேண்டாம். வாட்சப்பில், கான்பரன்ஸ் காலில் பேசிக்கலாம்.
உங்ககூட இருக்கிறவங்கள்ல ரொம்ப முக்கியமானவங்களை வாட்சப் கான்பிரன்ஸ்ல ஜாயின் பண்ணி விடுங்க விழியன். உங்க ஹெல்த்தையும் கவனிச்சுக்கோங்க. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
ஆனா, மனசளவில் போராளியா இருக்கிற நீங்க இதில் துவண்டு போகாம உடனே எந்திரிச்சு நின்னுடுவீங்கன்னு நினைக்கிறேன்.” என்றவளிடம்,
“உங்களைப் போல நல்ல மனசு இருக்குற பெரியவங்க சப்போர்ட் இருக்கும் போது, போராட எனக்கு எப்படித் தயக்கம் வரும...?” என விழியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனின் நண்பர்கள் மற்றும் கதிரின் வீட்டில் இருந்து அவனின் அப்பாவும் அம்மாவும் பதட்டத்துடன் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
எல்லோரும் வந்ததால் நான் கிளம்புகிறேன் என்னும் விதமாகத் தலையசைத்து விட்டு கிரஹா நகர்ந்து விட்டாள்.
கதிரின் அம்மா, “என்னப்பா ஆச்சு? என் மகன் எப்படி இருக்கான்? அவனை நான் பார்க்கணுமே...” எனப் பதறிச் சொன்னதும்,
“அம்மா எமெர்ஜென்சி வார்டில் இருக்கான் கதிர். உள்ள யாரையும் விட மாட்டாங்க. டாக்டர் வரட்டும் உங்களை உள்ள விடச்சொல்லி பேசிப்பார்ப்போம்.
லாரி பைக்கை இடிச்சதில் வண்டி தூக்கி அடிச்சிருச்சு.... நான் விழுந்த இடத்தில மண்ணு இருந்ததால எனக்கு இதோட போச்சு.
கதிர் விழுந்த இடத்தில இருந்த மைல் கல்லில அவனோட தலையும்... முட்டி கால் தரையிலும் மோதினதால கால் எலும்பு சேதம் ஆகிடுச்சு.
ஆனா, சரியான நேரத்தில் ஹாஸ்பிடல் வந்து உடனே ஸ்கேன் எடுத்து, தலையில ஏற்பட்ட காயத்தால மூளையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படலைன்னு சொல்லிட்டாங்க.
ஆழமான காயத்துக்கு டிரீட்மென்ட் கொடுத்து ரத்தம் கசியாமல் நிப்பாட்டி கால் எலும்பு பிராக்சருக்கு ஆப்பரேசனும் செய்தாச்சு.
அதனால உயிருக்கு எந்தப் பயமும் இல்ல. நடக்கவும் எந்தப் பிரச்சனையும் இருக்காது. சத்தான ஆகாரம் கொடுத்துப் புண்ணெல்லாம் ஆத்திட்டா சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.” என்றான் விழியன்.
கதிரின் அப்பா, “என் புள்ளையைத் தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கலாம்ல. இங்க எப்படிக் கவனிப்பாங்களோ? ஏம்பா ஆக்சிடெண்ட் ஆனதும் உனக்கு நினைவு இருக்கத் தானே செஞ்சது எங்களுக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல?” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும் மனதினுள் கிரஹா சொன்ன தனியார் ஆஸ்பத்திரியை பற்றிய முரண்கள் அவன் மனதினுள் வந்து போனது.
எனவே, “அப்பா, என் போன் ஆக்சிடென்டான இடத்தில என் பாக்கெட் விட்டு எங்கயோ விழுந்து காணாம போயிடுச்சு.
அதோட அவன் இருந்த நிலைமையில் எப்படியாவது உடனே ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயி காப்பாத்திடணும் என்ற நினைப்பு மட்டும் தான் அப்போ எனக்கு இருந்தது.
சரியா அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால அவன் கூடயே இங்க வந்து அவசரப்படுத்தி அவனை அவசர பிரிவுக்குக் கொண்டு போய்க் காப்பாத்தியாச்சு.
இதே நேரம் நான் பிரைவேட் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிருந்தா உயிர் காக்கும் பஸ்ட்டெய்ட் மட்டும் செஞ்சுட்டு டிரீட்மென்ட்டுக்கு இம்புட்டுப் பணம் உடனே கவுண்டரில் கட்டுங்கன்னு சொல்லி நம்மையும் பதட்டப்பட வச்சு ரூபாய் புரட்ட ஓட வச்சு மனசை ரணமாக்கியிருப்பாங்க.
இங்க என்ன பிரச்சனைன்னா, அவனுக்குக் கான்சியஸ் வந்ததும் ஜெனரல் வார்டுக்கு மாத்திட்டா, அதுக்குப் பிறகு தனியார் ஆஸ்பத்திரியில இருக்கிறது போலக் கவனிப்பும் அனுசரணையும் இருக்காது.
அதுக்கும் ஏதாவது நான் வேற ஏற்பாடு பண்றேன்ப்பா... கதிர் என்னோட உயிர் நண்பன்ப்பா... அவனுக்கு இப்படி ஆகியிருக்கக் கூடாத....” எனச் சொல்லும்போது வந்திருந்த நண்பர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீராம் முன்னால் வந்தான்.
“டேய் விழியா, உன்னால தான்டா கதிருக்கு இந்தக் கதி வந்தது... எம்.எல்.ஏ அகத்தியனுக்கு எதிரா நீ எலெக்சன்ல நிக்கிறதுக்கு அவன் சப்போர்ட் பண்ணியதுக்குத் தான்டா அவனுக்கு இப்படி நடந்துடுச்சு.”
எனச் சொன்ன மறுநிமிடம் பாய்ந்து அவனின் சட்டை காலரை பிடித்து உலுக்கியபடி, “டேய், என்ன சொன்ன? என்னாலயா? இது எம்.எல்.ஏ அகத்தியனோட வேலைன்னு உனக்கு மட்டும் எப்படிடா தெரிஞ்சது?” எனக் கேட்டான்.
அவன் அவ்வாறு ரெளத்திரமானதும், “அது... அது வந்து...” எனப் பயத்தில் வார்த்தை வராமல் குழறியவனிடம்,
“துரோகி! நீ இன்னைக்குக் காலையில் இருந்து எங்க பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு இருந்ததை நான் கவனிக்கலைன்னு தானே நெனச்ச! ஆனா, நான் என் வீட்டுக்கு போகும் போது நீ அம்மன் கோயில் பின்னாடி மறைஞ்சு நின்னதையும் பார்த்தேன்.
தெரு முக்கிலக் கதிர் எனக்காகக் காத்துக்கிட்டு நின்னப்ப கூட, நீ எங்களை ஒளிஞ்சு நின்னு நோட்டம் பார்த்ததையும் பார்த்தேன். ஆனா, நீ இப்படிக் கூலிப் படையோட கைக்கூலியா நடந்துக்கிடுவேன்னு நான் நினைக்கலை.
அவன் எப்படித் துடிச்சான் தெரியுமா? எப்படிடா உனக்கு மனசு வந்தது.
உன் கூடவே ஒன்னா வளர்ந்தவங்களை இப்படிக் கொலைகாரக் கூட்டத்தோடு சேர்ந்து கொல்ல ஹெல் பண்ண எப்படிடா உன்னால முடிஞ்சது?” எனச் சொல்லி சொல்லி அவனை அடித்தான்.
ஒன்றிரண்டு அடிக்கு மேல் விழியனின் கையால் ஸ்ரீராம் அடி வாங்காமல் உடன் இருந்த நண்பர்கள் இருவரையும் பிரித்து விட்டனர்.
“விழியன் இது ஹாஸ்பிடல், இங்க வச்சுப் பிரச்சனை வேணாம். இப்போதைக்கு அவனை விட்டுடு.” என நண்பர்கள் சொன்னதால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவன் பிடியிறுக்கம் சற்றுத் தளர்ந்திருந்த வேளை, அந்த இடத்தில் இருந்தால் மேலும் பல கேள்விகள் தன்னிடம் எழுப்பப்படும் எனப் புரிந்த ஸ்ரீராம் வெடுக்கென்று உருவிக்கொண்டு வெளியேறினான்.
‘அவனுடன் இணைத்து அரசியல் களத்தில் நிற்க இனி நண்பர்களுக்குள் ஒரு பீதி உருவாகியிருக்கும்’ என நினைத்துக் கொண்டான்.
விழியனால் கசங்கப்பட்ட தனது சட்டையின் காலர் பக்கத்தையும், அவன் தனது கன்னத்தில் விட்ட இரு அடியால் சிவந்திருந்த கன்னத்தையும் மாறி மாறி நீவி விட்டுக்கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.
அதே நேரம் விழியனுக்கும் கதிருக்கும் ஆக்சிடென்டாகி மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விப்பட்டுத் தாத்தா காளிதாஸ் மற்றும் மதி இருவரும் அவர்களைப் பார்க்கப் பதட்டத்துடன் அங்கு வந்து நின்றவர்கள், விழியனுக்கும் ஸ்ரீராமுக்கும் இடையில் நிகழ்ந்த கைகலப்பையும் பேச்சு வார்த்தையையும் கேட்டு விபத்து தற்செயலாக நடந்தது இல்லை என உணர்ந்து கொண்டனர்.
எப்பொழுதும் மிடுக்கான உடையில் கம்பீரமாக நிமிர்ந்த நடையுடன் பார்த்துப் பழகிய விழியன், காலில் மருந்து போட்டு கட்டுப்போட முட்டிவரை வெட்டிவிட்டு முட்டியில் கிழிந்து தொங்கும் பேண்டுடனும், கை, கால் மற்றும் தலையில் மருந்திட்டுப் போடப்பட்ட கட்டுகளுடனும், இரத்தம் தோய்ந்த உடை மற்றும் கலைந்த தலையுடன்.. எப்பொழுதும் அவனிடம் இருக்கும் துடிப்பையும் மீறி சோர்வாகத் தெரிந்த விழியனைக் கண்டு காளிதாசின் மனம் ரணமானது.
‘தனது மகன் அறிவு இதற்காகத்தான் இவனை அரசியலில் எல்லாம் இறங்க வேண்டாம் எனத் தடுத்தான் என்பதை அந்நேரம் உணர்ந்தவர், இந்நிலையில் இவனை வாணி பார்த்தால் அழுதே கரைந்திருப்பாள்...’ என நினைத்துக் கொண்டார்.
ஆனாலும் இந்த நிலையிலும் அவன் ஸ்ரீராமிடம் காட்டிய ருத்ரமுகத்தையும் செயலையும், எதிரில் உள்ளோரால் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடுவதையும் கண்டார்.
தன பேரனைபோலத் தீரத்துடன் இருப்பவனை விடக் குள்ளநரிகளுக்கே இது காலமென உணராது இருக்கும் தனது பேரனிடம், “அப்போ நடந்தது தற்செயலா நடந்த ஆக்சிடெண்ட் இல்ல... அப்படித்தானே விழியா? கதிர் எப்படி இருக்கான்? அவனுக்குப் பெருசா ஆபத்து எதுவும் இல்லைதானே?” எனக் கேட்டார்.
“ம்... உடனே ஹாஸ்பிடல் கொண்டு வந்து டிரீட்மெண்ட் குடுத்ததால் காப்பாத்தியாச்சு தாத்தா... நீங்க எப்படி வந்தீங்க? உங்களுக்கு யார் சொன்னது? வீட்டில அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சா?
எனக்கு எதுவும் இல்லைன்னு முதலில் போன் போட்டு அவங்களுக்குச் சொல்லுங்க. இல்லைன்னா பயந்துடுவாங்க... அதனால பிபி ரெய்ஸ் ஆகி அவங்க ஹெல்த்துக்குப் பிரச்சனை ஆகிடும்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் மொபைல் ஒலி எழுப்பியது.
அவனைப் பார்த்து, “உங்க அம்மா தான் பேசுறா, நாங்க உனக்கு ஆக்சிடென்டாகியதை சொல்லலை. ஆனா, இந்நேரம் தெருவில் யார் மூலமாவது அவ காதுக்கு விஷயம் போயிருக்கும்.” எனச் சொல்லி விட்டு அழைப்பை ஏற்றார்..
“மாமா என் புள்ளைக்கு...” எனப் பதட்டத்துடன் வாணி பேச ஆரம்பித்ததும்,
“இப்போ எதுக்குமா நீ பதட்டமாகுற? பதறாதம்மா.. இதோ என் முன்னால தான் விழியன் நின்னுக்கிட்டு இருக்கான்... அவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல...” எனச் சொன்னார்.
“இந்த வார்த்தையைக் கேட்டதும் தான் என் உயிரே வந்தது மாமா. அவனை ஒழுங்கா வீட்டுக்கு வரச் சொல்லுங்க. நீங்க சொன்னா அவன் கேட்பான். வீட்ட விட்டு போன அன்னைக்கே ஆக்சிடெண்டுன்னு கேள்விப்பட்டு நான் ஆடிப் போயிட்டேன்.
அரசியலில் இறங்கணும்னு அவன் சொன்ன நிமிசமே இப்படி ஆனது எனக்கென்னமோ அபசகுணமாப்படுது. அவனை எப்படியாவது பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருங்க. அவனுக்கு எதுவும் இல்லை தானே? இந்த விஷயத்தில் நீங்க பொய் சொல்ல மாட்டீங்கன்னு நான் நம்புறேன் மாமா.” என்றார்.
“இல்லம்மா லைட்டா கை, காலில் உரசியிருக்கு. மத்தபடி எந்தப் பிரச்சனையும் இல்ல.... நான் அவன்கிட்ட பேசுறேன், நீ டென்சன் ஆகாம இரு.” எனச் சொல்லி விட்டு மொபைல் இணைப்பை துண்டித்தார் காளிதாஸ்.
அவரிடம் விழியன், “இனி பின்வாங்க முடியாது தாத்தா...! அபசகுணம் அது இதுன்னு சொல்லி என்னைய எல்லாத்தையும் விடச்சொல்லி கூட்டிட்டு வரச்சொல்லி இருப்பாங்க அம்மா. ஆனா... என் ஃப்ரெண்டு அந்நேரம் துடிச்ச துடிப்பு இன்னும் என் கண் முன்ன நிக்குது.... இதுக்காகவே இனி அந்த அகத்தியனை அவ்வளவு சீக்கிரம் இந்த எலெக்சன்ல ஜெயிக்க விடமாட்டேன்.
அவனைப் போல ஜந்துக்களைப் பார்த்துப் பயந்து பின் வாங்கிட்டே போனோம்னா நம்மளை அகழியில் விழவைக்கிற பயங்கரவாதிகக்கிட்ட நாட்டை ஒப்படைப்பது போல ஆகிடும்.” என்றான்.
“விழியா, நீ நினைக்கிறது போல அவங்களை எதிர்த்து நிக்கிறது ஈசி இல்லை.... இங்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் அரசியலில் களம் ஆட அவங்க விடுவாங்க.... அவங்களைத் தவிர வேற ஒருத்தரை இங்க பெரியாளாக இரண்டு பேருமே விடமாட்டாங்க...
அப்படி இன்னொருத்தன் அரசியலுக்கு வரணும்னா இவிங்க இரண்டு பேரில் ஒருத்தனை கொன்னுட்டுத்தான் மூணாவது உள்ளவன் களத்தில் நுழைய முடியும். நாம அப்படியெல்லாம் செய்ய மாட்டோம்.... ஆனா, இரண்டு பேரும் சேர்ந்து மூணாவதா இருக்குற நம்மளை தீர்த்துக்கட்டிருவாங்க.” என்றார்.
“தாத்தா எத்தனை நாள் தான் இப்படிப் பயந்துக்கிட்டே இருக்குறது. எதுக்கும் முடிவுன்னு ஒன்னு இருக்கும்ல. இந்தப் பயம் என்னால ஒரு முடிவுக்கு வந்தாலும் வரலாம்ல.” என்றான்.
“இதோ பார் விழியா, அரசியல்னு பேச்சு ஆரம்பிச்சதும் உன்னைய அடிச்சுப்போட்டு ஆஸ்பத்திரிய மிதிக்க வச்சுட்டாங்க.” என்றார்.
“அதாவது அவங்க எங்களைப் பார்த்து பயப்படுறாங்கனு அர்த்தம் தாத்தா... ஓடுவதைக் கண்டாத்தான் துரத்துறதுக்கு வேகம் வரும். திரும்பி பார்த்து மோத ரெடியாகிட்டோம்னா துரத்தினது பயந்து ஓட ஆரம்பிச்சிடும்.” என்றான்.
அவன் பேசுவதைக் கேட்ட அவனின் அண்ணன் மதி, “டேய் நீ இவ்வளவு தன்னம்பிக்கையா பேசுவதால, நான் உனக்குச் சப்போர்ட் பண்றேன். அம்மா, அப்பாக்கிட்ட உனக்காகப் பேசி உன்னை இப்படியே ஏத்துகிட சொல்லி பார்க்கிறேன். உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு அவங்களுக்குப் பயம்! அரசியலில் இறங்கி குடும்பம் வேலைன்னு செட்டில் ஆகாம போயிடுவியோன்னு பயம்.
ஒரு வகையில் நான் பக்கா சுயநலவாதி... என் தம்பியா உன்னைய பார்க்கையில் உன்னோட இந்தக் குணம் ஏன் எனக்கு இல்லாம போச்சுனு என்னை நானே கேட்டு பார்க்குறேன்....
நினைச்சதை, ஆசைப்பட்டதைச் செய்யாம வேலை மூலமா வரும் பணத்தை மட்டும் எய்ம் பண்ணி சுத்திட்டு, வேற எதையும் கண்டுகொள்ளாம இருக்கப் பழகிட்டேன்.... இது போல வாழ்வதால வாழ்க்கையில் எப்பவுமே மனது நிறைவில்லாமலேயே நகர்ந்துகிட்டு இருக்கிறது போல ஆகிடுது.
ஆனா நீ உன் மனசுக்கு நிறைவான விஷயத்தைச் செய்ற..., பணத்திற்காக வேலை அப்படின்றதை எல்லாம் பெருசா நினைக்காம மனசுக்காக நீ வாழுற விழியா... என் தம்பின்னு உன்னை நினைக்கப் பெருமையா இருக்க.” என்றான்.
விழியனுக்குத் தனது அண்ணனின் ஆதரவான வார்த்தைகள் நிம்மதியையும் தெம்பையும் கொடுத்தது. தன் வீட்டில் தனது தாத்தா மட்டுமே என் பக்கம் இருப்பார் என நினைத்திருக்க, அவருமே தான் எதிர்பார்த்த அளவில் தனக்குச் சப்போர்ட் செய்யாமல் அம்மா அப்பாவின் பக்கமே நின்றதால் மனதளவில் கொஞ்சம் சோர்ந்து தான் போய்விட்டான்.
தான் பிறந்து வளர்ந்த நிழல் தன்னை விட்டு விலகுவதை யாரால்தான் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியும்...? இருந்தாலும் கொண்ட கொள்கைக்கு உறுதியாக, சுடும் மணலில் நடக்கத் தன்னை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்ட விழியனுக்கு, தனது அண்ணனின் ஆதரவான வார்த்தைகள் கொஞ்சம் இளைப்பாற நிழல் தந்ததைப்போல ஓர் ஆசுவாசத்தைக் கொடுத்தது.
அதனால் அவனிடம் நெகிழ்ந்த குரலில், “தேங்கஸ் மதி... ஆனா, எனக்காக நீ அம்மா, அப்பாவை எதிர்த்துப் பேச வேணாம். நான் என்னைக் கவனிச்சுக்குவேன். என்னை நீ புரிஞ்சுகிட்ட தானே அதுவே போதும்.” எனச் சொன்னான்.
ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் கதிர் இருக்கும் அறைக்குள் செல்வதைக் கண்டு, “அதோ டாக்டர் போறாரு. அம்மா வாங்க பார்த்து பேசி உங்களை உள்ளே விடச் சொல்லுவோம்.” எனச் சொன்னான்.
விருட்டென்று ஓர் அடி எடுத்து வைத்த விழியனின் காயத்தால் வலியில் அவன் முகம் சுருங்குவதைக் கண்ட அவனின் தாத்தா காளிதாஸ், “நான் போய்ப் பேசுறேன், நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.” என்றவர்,
“மதி, நீ போய்ப் பக்கத்தில் இருக்கிற ஏதாவது கடையில் அவன் இப்போ உடுத்தியிருக்கிற கிழிஞ்ச டிரஸ் மாத்தி போட புதுசு வாங்கிவந்து கொடு. இப்படி இவனைப் பார்க்க முடியலை.” எனச் சொல்லிவிட்டு கதிரின் அம்மா, அப்பாவுடன் டாக்டரை பார்க்கச் சென்றார்.
***

No comments:
Post a Comment